Saturday, September 12, 2009

ஈழத்தின் கோரம்

தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய பின்னூட்டம்:


//கட்டுரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வார்த்தையில் ஈழ இந்துக்களை குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறது. நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது.

புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு. அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை - ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் - சிறுவர்கள் - வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும், ஜஸ்டிஸ் அமைச்சகத்திற்கு ஆலோசகர்களாக தேரர்கள் நியமிக்கப்பட்டு பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மற்றபடி நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி ஜடாயு.//



-------

ஸ்ரீகிருஷ்ணா,


தனி மனித முத்திரை குத்தல்களில் ஈடுபடாமல், பதில் சொல்ல முடியுமென்றால், கொஞ்சம் எனது இந்த பதில்களை படித்து, சிந்தித்துவிட்டு ஒரு நாள் இடைவெளி விட்டு பின்பு பதில் சொல்லுங்கள். தயவு செய்து *உங்களைப் போன்ற புலி ஆதரவாளர்கள்' போன்ற முத்திரை குத்தல்களை தவிர்க்கவும். நாம் சந்திப்பது இணையத்தில். அதில், நான் புலி ஆதரவாளன் இல்லை என்று சொல்லியே எனது கருத்தை எழுதியபின்பு இப்படி முத்திரை குத்திவிட்டால் பின்பு பேசுவதற்கு என்ன இருக்கிறது? யார் புலி ஆதரவாளர் என்பது நமது எழுத்துக்களை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நீங்கள் என் மீது இப்படியான அபாண்ட முத்திரையை குத்தினால், நான் கூட நீங்கள் தான் உண்மையான புலி ஆதரவாளர், வேண்டுமென்றே புலி எதிர்ப்பாளர் போன்று எழுதி ஆனால், புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அல்லது இது 'பொட்டு அம்மான்' என்று எதையாவது எவ்வித ஆதாரமுமில்லாமல் முத்திரை குத்தி நகர்ந்துவிட முடியும். எனவே, இப்படியான முத்திரை குத்தல்கள் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. சற்றே நிதானமாக எழுதுங்கள், பதில் சொல்லுங்கள்.

----


// நான் தெரியாமல் தான் கேட்கிறேன்… இலங்கையில் புலிகளுக்கு மாற்றாக ‘இந்து’ என்ற உணர்வுடன் செயல்பட முயற்சித்த ஈழ விடுதலை /ஈழ அரசியல் இயக்கம் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன் பார்ப்போம்… நான் இது வரை கேள்விப்படவில்லை. இலங்கைத் தமிழர்களே புலிகள் ஒடுக்கப்பட்ட பின்னும், இந்துக்களாகிய நாங்கள் அவதிப படுகிறோம் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை. இதில் எங்கே இந்துத்துவம் வருகிறது என்று தெரியவில்லை.//

'இந்து' என்ற உணர்வுடன் இருந்தால் தான் அவர்கள் இந்துவா? அப்படியென்றால், உங்கள் (நமது) முன்னோர்கள் அப்படி இந்து என்று கருதி, இந்து உணர்வுடன் இருந்தார்களா? அப்படி இல்லாது போனவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்லவா? எனக்குத் தெரிந்து ஒரு தலைமுறை, இரு தலைமுறைக்கு முன்பாக இந்து என்ற உணர்வுடன் யாரும் இருந்ததில்லை. தங்களை பிள்ளைமார், பிராம்மணர், சைவர், வைணவர் என்று எதாவது ஒரு செக்டோரியன் அடையாளத்துடனேயே கண்டார்கள்.

ஈழத்தமிழர்கள் சரித்திரப் பிண்ணனியின் காரணமாகவும், சில திசை திருப்பல்கள் காரணமாகவும் இன்று தம்மை சைவர்களாக கருதுகிறார்கள். ஆறுமுக நாவலர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இந்து இல்லையா? அல்லது அப்படி தன்னை சொன்னால் தான் இந்து என்று கருதுவீர்களா? அப்படியென்றால், அதன் நீட்சியாக இராமனுஜரையும், கண்ணப்பரையும், இன்னும் எண்ணற்ற ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், உங்களது முன்னோர்களையும் இந்து இல்லை என்பீர்களா? மேலும்,அப்படி இந்து என்ற உணர்வுடன், இந்துத்துவ ஆதரவாளராக இருந்தால் தான் ஒருவர் இந்து என்று கருதுவது பேதமை மட்டுமல்ல, வக்கிர எண்ணம்.


//உங்களைப் போன்ற புலி அபிமானிகள், கிறிஸ்தவம் கைவிட்டபின் இந்துத்துவத்தால் ஏதும் பலிக்குமா என்று பார்க்கிறீர்களா?//


இந்த புலி அபிமானி முத்திரை குத்தலுக்கு நான் மேலே பதில் சொல்லிவிட்டேன். கிறித்துவம் கைவிட்டபின் என்று எதை சொல்கிறீர்கள்? பசியால் வாடுகிறான் ஒருவன், அவனுக்கு ஒருவர் சாப்பாடு போடுகிறார். அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்த்து சாப்பிடுவானா? அதே நிலையில் தான் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.


// War is ugly. Civil War is no exception. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே மரணம். //


யார் கத்தியெடுத்தது? தொடர்ந்து இனக்கலவரங்கள், அரசாங்க ரீதியான பாரபட்சங்கள், வன்கொடுமைகள், வலுக்கட்டாய குடியேற்றங்கள் என்று தொடர்ந்து கத்தியெடுத்தது சிங்கள-பவுத்த பேரினவாத அரசுதான். ஒரு கட்டத்தில் அதற்கான எதிர்வினையாக குழுக்கள் கிளம்பின. அவற்றுள் ஒன்று மற்றதையெல்லாம் சாப்பிட்டு பெரிய தீவிரவாத குழுவாக உருப்பெற்றது. இந்த கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற லாஜிக்கை, நீங்கள் பின்னே சொல்லியிருக்கும் நாலு பிரதமர்கள் மரணம் என்ற விஷயத்துக்குக் கூட பயன்படுத்தலாம்தானே? சிங்களவர்கள் வினை விதைத்தார்கள், தீவிரவாதத்தை அறுவடை செய்தார்கள். இப்போது விதைத்திருப்பதற்கு எதிர்காலத்தில் அறுவடை செய்வார்கள் என்று கூட சொல்லலாம் தான். நாம் சுவற்றிற்கு எந்தப்புறம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது தர்க்கத்தை வளைத்துக்கொள்ளலாம்.



// புலிகள் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இந்த கொடூரத்திற்கு ஒரு தலைப் பட்சமாக இலங்கை அரசை மட்டும் குறை சொல்வது சரி அல்ல. இலங்கை அரசு, இத்தனை நாள் தாமதித்ததே பெரிது. இப்போது அவர்கள் “enough is enough” என்று இறங்கி விட்டார்கள். //

ஒரு அரசு, இப்படி நீங்கள் சொல்வது போல 'enough is enough' என்று இறங்கினால் என்ன ஆகும் என்று உங்களை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்து பாருங்கள். 9/11 நிகழ்ந்தபின்பு முஸ்லீம்கள் மட்டுமல்ல, பிரவுன் நிறத்தவர்கள் பலரும் சங்கடங்களை அமெரிக்காவில் சந்தித்தார்கள். உடனடியாக அமெரிக்க அரசு உங்கள் பகுதிகளின் குண்டு வீசி எல்லோரையும் சகட்டு மேனிக்கு கொன்றிருந்தால் அது 'enough is enough' என்பதன் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்வீர்களா? அல்லது எல்லா பிரவுன் நிறத்தவரையும் விலங்குகளைப் போல திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து சோதனை செய்கிறோம் என்ற பெயரில் தினம் தினம் பிடித்துச் சென்று சித்தரவதை செய்து கொன்று போட்டால் - உங்களது மனைவி, மகன் அல்லது மகள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தால், அதை இப்படித்தான் நியாயப்படுத்துவீர்களா? நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நக்சலைட் பிரச்சினை இருக்கிறது. அரசு அதற்காக விமானத்திலிருந்து குண்டுவீசி தண்டகாரன்யக்காடுகளில் இருக்கும் குடிகளை ஆயிரக்கணக்கில் கொன்று போட்டால், அதை சரி என்பீர்களா அல்லது தெலுங்கானா முழுவதையும் திறந்தவெளிச்சிறைசாலையாக மாற்றினால் சரி என்பீர்களா?

// They have won. they are celebrating in their own way. இதே புலிகள் செயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புறநானூற்று வீரம் என்று குதித்திருக்க மாட்டார்களா… //

அப்படியென்றால் நீங்கள் புலிகளையும், ஒரு அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. இதில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒசாமா பின் லாடனையும் அமெரிக்க அரசையும் அல்லது நக்சலைட்டுகளையும் இந்திய அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரி என்று நம்புவீர்களேயானால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட பார்வை நல்லவேளை உலகில் எங்கும் இல்லை என்பதோடு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். முன்பு ஒரு முறை எனது பதிவில், குஜராத்தில் இஸ்லாமிய தாதா/தீவிரவாதி ஒருவனின் மனைவியை போலீசார் கற்பழித்து கொன்றதைப் பற்றி வருந்தி எழுதியிருந்தேன்.

இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கெதிராக தொடர்ந்து எழுதிவந்தும், இன்றும் என்னால் சாமான்ய முஸ்லீம் மக்களை துன்புறுத்துவதும், கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. அப்படிச் செய்யவில்லை என் அரசு, என் சமூகம் என்பதில் எனக்கு பெருமிதம் இருக்கிறது. சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை எனது அரசும், நீதி அமைப்பும் (நாள்பட்டாவது) தண்டிக்கிறது, சோபியானில் இரு காஷ்மீர முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் உரியவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது பொது சமூகம் அப்படியான நிர்ப்பந்தத்தை கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட ஒரு அரசையும், சமூகத்தையும் எனது சமூகம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.


// மெஜாரிட்டி மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது. இலங்கை என்ன இந்தியாவா.. //

ஸ்ரீகிருஷ்ணா - இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பதின் விளைவை ஓரளவுக்கு தமிழ்நாட்டுப் பிராம்மணர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இப்போது இலங்கை அரசை நீங்கள் நியாயப்படுத்துவது போலவே, இதையும் யாராவது நியாயப்படுத்தலாம். அதை நீங்கள் ஏற்பீர்களா(தயவு செய்து இதற்காக நேர்மையான பதிலை சொல்லுங்கள் - ஏனெனில் தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் நிலைக்கும் இலங்கையில் தமிழர்களின் நிலைக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு). இலங்கையில், சிங்களவர்கள் அரசு ஒத்துழைப்புடன் எத்தனை கலவரங்களை புலிகளுக்கு முன்பாக தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறார்கள், எத்தனை பத்தாண்டுகள் அந்த சமூகம் அமைதியாக போராடியிருக்கிறது என்று பாருங்கள்.

1983 போன்ற ஒரு கலவரத்தை மைனாரிட்டியான பிராம்மணர்கள் மீது ஏனைய தமிழர்கள், அரசு உதவியுடன் சேர்ந்து நடத்தி, பின்பு அதை என்னைப் போன்ற அபிராம்மணர்கள் நியாயப்படுத்தினால் அப்போது அது எவ்வளவு அருவருப்பான ஒன்றாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். முத்திரை வேறு - ஆனால் விஷயம் அதே தான். முகவரி வேறு என்பதால் நமது நியாயத்தன்மை விடைபெற்றுக்கொள்வது துரதிர்ஷ்டமான விஷயம்.

பாகிஸ்தானில், பங்களாதேஷில் எல்லாம் இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நினைக்கிறார்கள். அதையெல்லாம் சரி என்கிறீர்களா? ஒரு நாட்டிற்கு இமிக்ரண்டாக போவதற்கும், தமது பூர்வீக நிலத்தில் காலனி கால சரித்திர தவறுகளால் மைனாரிட்டியாவதற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஈழத்தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எப்படி மைனாரிட்டியாக ஆவார்கள்? பிரித்துக் கொடுக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை இந்தியாவோடு சேர்த்துக்கொடுத்திருந்தால் சிங்களவர்கள் மைனாரிட்டி ஆகியிருப்பார்கள். ஒருவேளை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா எல்லாம் செர்த்து கொடுத்திருந்தால் இந்துக்கள் கூட (அதாவது இந்து என்று நீங்கள் கொடுக்கும் டெஃபனிஷன் படியான இந்துக்கள்) மைனாரிட்டியாக போயிருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்த்து பின்பு இதற்கான பதிலை கூறுங்கள்.

//இலங்கையில் மக்கள் முள்வேலிக்குள் அவதிப்படுகிறார்கள். சரி. இந்துக்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. சொல்கிறீர்கள். அவர்களே கூட அப்படி நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் இவ்வளவு நாள் வாய் மூடி இருந்து விட்டு இப்போது நான் இந்து என்று அலறுவது நம்பக் கூடியதாக இருக்காது. அதோடு ஏன் பிள்ளையே ஆனாலும் சுவைன் ப்ளூ வந்து விட்டால் ஓரமாக ஒதுக்கி கஞ்சிதான் சாப்பாடு கொடுக்க வேண்டி வரும். இங்கே இலங்கை தமிழர்களுக்குள் நான்கு பிரதம மந்திரிகளையே பலிவாங்கிய, தற்கொலை தீவிரவாத விஷ வைரஸ் கலந்து விட்டிருக்கிறது. அப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் அப்பாவிகள் சாகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இலங்கை அரசு உறுதியுடன் செயல் படுவதை பாராட்ட வேண்டும். ஏற்கனவே அவர்கள் தவனை முறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடுதலை செய்து குடியேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பத்தாயிரம் பேர்களை விடுதலை செய்து விட்டதாக படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே குடிஎர்ருவார்கள் என்றே நம்புகிறேன்//

ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இல்லாமல், முழுக்க முழுக்க கிறித்துவர்களாகவோ அல்லது பவுத்தர்களாகவோ இருந்திருந்தால் கூட எனது எண்ணம், இந்த விஷயத்தில் இப்படித்தான் இருக்கும். இதைத் தவிர இந்த கருத்து பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களைப் போன்ற கருத்துடையவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஈழத்தமிழர்கள் இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதை நினைத்தும், மொழியால் - கலாசாரத்தால் - வரலாற்றால் - நிலத்தால் அண்மையராக இருக்கும் தங்களைப் போன்றவர்களின் ஈரமற்ற கருத்துக்களும், வக்கிர மனோபாவத்தையும் பார்த்தால் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. இந்த விவாதத்தில் நான் சொல்வதை சொல்லிவிட்டேன் - இன்னும் நிறைய எழுதத்தோன்றினாலும், சுருக்கமாக சொல்ல முயன்றுள்ளேன். உங்களைப் போன்றவர்களை மாற்ற முடியாது என்று தெரியும். மற்ற பொதுஜனங்களுக்காகவே இந்த பதிலை எழுதியிருக்கிறேன். எனவே நீங்கள் இதற்கு பதிலை எப்படி சொன்னாலும், அமைதியே காப்பேன். ஆனால் ஒன்று நீங்கள் எதை எழுதினாலும், பின்பு கொஞ்சம் உங்களை, உங்களது குடும்பத்தை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்துகொண்டு பின்பு எழுதுங்கள். அல்லது என்றாவது ஒரு நாள் இதை யோசித்துப் பாருங்கள், மனிதராவீர்கள்.

Stumble Upon Toolbar

Sunday, August 30, 2009

ரசித்த கவிதை - ஹைக்கூ மொழிபெயர்ப்புகள்(ஸ்ரீதரன்)


புல்லின் பனித்துளி
காற்றில் மீண்டும்
கரைவதன் இன்பம்
(கோராகு, 1837)

தூரிகையை வீசிவிட்டேன்
இனி நான் நிலவுடன் பேசுவேன்
நேருக்கு நேராய்
(கோஹா, 1897)

என்ன அற்புதம் -
நிலவொளிப் படகில்
பிரார்த்தனை கீதம்
(கொஸான், 1747)

விடைபெறுகிறேன்; விடைபெறுகிறேன்
மலர்தலில்லை, உதிர்தலில்லை
ஆயினும் யாவும் நலமே
(ஹாகுசாய், 1792)

இரவுகளின் கடைசி இரவில்
மலர்வனங்கள் கிசுகிசுக்கும்
‘புத்தனே’, ‘புத்தனே’ என்று.
(ரான்சேகி, 1738)

வசந்த மலர்கள்
வீணர்களைக் கடியும் நான்
விடிந்தும் உறங்குகிறேன்
(ஹாகுதோ, 1727)

குளிர்கால உறைபனி
தெளிந்த நீராய் உருகும்.
தெளிந்திருக்கிறது மனம்
(ஹ்யாகா, 1779)

இந்த வருடம் நான்
தாமரையைக் காணவிழைகிறேன்
அந்தப் பக்கத்திலிருந்து
(ஜாகுரா, 1906)

குறுகும் கோடையிரவு
ஐம்பதாண்டுக் கனா
முடியுமுன் கலைகிறது
(காபூ, 1827)

உறைகுளிர்
ஆழம்காணவியலா
பெருங்கடலோசை
(காசென்ஜோ, 1776)

எனது முதிர் உடல்
இலைநுனிப்
பெரும் பனித்துளி
(கீபா, 1868)


எரிந்தொழிந்தது என்
சேமிப்புக் கிடங்கு
ஏதுமிலை நிலவை மறைக்க
(மசாஹிதே, 1723)

உதிருங்கள் மலர்களே
விட்டுச் செல்லுங்கள்
வாசத்தின் நினைவுகளை
(மின்தெய்சென்கன், 1844)

சாவும் வாழ்வும்
சந்திக்குமிடத்தில்
குயிலின் கீதம்
(நாமாகாச்சி, 1893)

கனவைத் திருப்பித் தா காகமே
எந்நிலவுக்கு என்னை எழுப்பினாயோ
பனிமூடிக் கிடக்கிறது அது
(ஓநிட்சுரா, 1738)

இரவில் என் துயில்
வாழ்வின் கோடை நிழல்களைத்
தழுவிக் கொள்கிறது
(ஓடோ, 1935)

ஃபுஜி மலையை
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென இறக்கவே விருப்பம்
(ரான்காய், 1845)


தலையணைத் தள்ளிப்போட்டுக்கொள்கிறேன்
முழு நிலவுக்கு
அருகாக
(சாய்பா, 1858)

இவ்வுலகில் பயணித்தேன்
நிலவும் பனியும் மலருமாய்
ஒரு வாழ்வு
(ஷார்யூ, 19-ஆம் நூற்றாண்டு)

விடிவானம்.
நிஜம்தானா இது?
புத்தனே!
(சோனோமே, 1726)

ரத்தவாந்தி
கனவையும் நிஜத்தையும்
தெளிவுறுத்தும்
(சுனாஓ, 1926)

அழைக்கப்படுகையில்
விடைபெற்றுக்கொள்வேன்
நிலவின் கீழே என் வீடு
(தாகூசீ, 1846)

மரணக் கவிதை
வெறும் மாயை
மரணம் மரணமே
(தாகோ, 1795)

கரியால் வரைந்த
கோட்டுப்படமா?
மங்கிய நிழலா?
(தோயோகுனி, 1825)

Stumble Upon Toolbar

Friday, June 5, 2009

மனமெனும் நோய்..(ஜெயமோகன்)

மனமெனும் நோய்..


ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்! என் பள்ளிக்காலங்களில் நான் தமிழில் சிறந்து விளங்கியிருந்தபோதும், பணத்தைத் தேடி அலைந்த இந்த இடைப்பட்டக் காலங்களில் தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த கடிதத்தில் இருக்கும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்கள் எழுத்துக்களை இந்த வலைமனை மூலம் வாசித்து வந்திருக்கிறேன். முதலில் சற்று சிரமமாக இருந்த போதும், தொடர்ந்து வாசித்ததில் உங்கள் எழுத்தின் பொருளும், நடையும் பிடித்து விட்டது.

நீங்கள் அவ்வபோது எழுதி வரும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மிகவும் பயனளிப்பவையாக உள்ளன. இம்மாதிரியான மாற்று மருத்துவத்தில் எனக்குள்ள அனுபவத்தை சொல்கிறேன்.

எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு உடல் சம்பந்தமான பிரச்சனை வர ஆரம்பித்தது. எனது முதுகுத்தண்டின் கீழ் முனையில், ஆசன வாயிலுக்கு அருகில் சிறு நெருடலை உணர ஆரம்பித்தேன். உட்காரும் போதும், தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதும் அந்த நெருடலை என்னால் உணர முடிந்தது. வலியில்லை. ஒரு சில வாரங்களுக்கு பின்னர் அந்த நெருடல் அதிகரித்த மாதிரியும் ஒரு சிறு வலி உணர்ந்த மாதிரியும் இருந்தது. ஒருவேளை நான் தொடர்ந்து அதை பற்றியே யோசித்து கொண்டிருப்பதால் தான் அவ்வாறு தோன்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் சில நாட்களில் அந்த நெருடலுடன் கொஞ்சம் வலியும் சேர்ந்து கொண்டு என்னை பீதியடைய வைத்தன. வலி சிறிய அளவில் தான் இருந்த போதும், அது தோன்றும் இடம் மிக முக்கியமானது அல்லவா? இருக்கவே இருக்கிறது சர்வரோக நிவாரணி - இணையம்! கூகுளில் தேட ஆரம்பித்தேன்..

அவ்வாறு செய்ததற்கு என்னை நானே நொந்தும் கொண்டேன். அப்பப்பா எத்தனை விதமான வியாதிகள், பிரச்சனைகள்.. எல்லாமே எனக்கு இருக்கின்ற மாதிரி ஒரு கலக்கம். இந்த வலி பெரிதாக்கி என்னை செயலிழக்கச் செய்ய போகிறது என்று உறுதியாக நம்பினேன். மேலும் கலக்கம், குழப்பம். ஒரு வழியாக முடிவெடுத்து அலோபதி டாக்டரிடம் சென்றேன்..

அவர் என்னை பரிசோதித்தார், x-ray எடுத்துப் பார்த்தார். x-ray யில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றும், நான் தொடர்ந்து உட்கார்ந்தே வேலை பார்க்கும் பணியில் இருப்பதால் வரும் பிரச்சனையை தான் என்றும் சொன்னார். மருந்து எழுதிக் குடுத்தார். ஒன்று வலியைக் குறைப்பதற்கு, மற்றொன்று எலும்பை உறுதியாக்குவதற்கு. சில நாட்களில் உறுத்தலும் வலியும் குறைந்தது. ஆனால் வலி மாத்திரையை நிறுத்தியவுடன் திரும்ப வந்தது. இது நிரந்தர தீர்வு அல்ல என்று உணர்ந்தேன். வேறு மருத்துவரிடம் சென்றேன். அவர் மிகப் பரிவுடன் விசாரித்தார். இதற்கு மருந்து அவசியம் இல்லை என்றும், ஆனால் 6 மாதங்களுக்கு நான் உறுதியான தரையில் உட்காரக் கூடாது என்றும், அலுவலகத்திலும், காரிலும் doughnut போன்ற நடுவில் ஓட்டை உள்ள தலையணை மீதே அமர வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சிறிது நம்பிக்கை வந்தது, இருந்தாலும் என் மனமென்னும் குரங்கு இதற்கு விரைவான தீர்வு இல்லையா என்று தேட ஆரம்பித்தது. அதுவும் இல்லாமல், அந்த doughnut மெத்தை பிறர் முன்னிலையில் உபயோகிக்கவும் கூச்சமாக இருந்தது. எனவே அதை வாங்கவே இல்லை. மீண்டும் கூகுளில் தேடல்…

இரண்டாவதாக நான் பார்த்த டாக்டர் எனக்கு வந்திருப்பது coccyxdinia என்ற உபாதையின் தொடக்கம் என்று சொல்லியிருந்தார். அதை பற்றி கூகுளில் தேடினேன்.. மீண்டும் பயமுறுத்தும் தகவல்கள். இந்த நோயை பற்றி மட்டுமே விவாதிக்கும் forums வாசிக்க ஆரம்பித்தேன். அலோபதி மருத்துவத்தில் யாருமே நிரந்தர தீர்வு அடைந்த மாதிரி தெரியவில்லை. இந்த வலியை சமாளித்து வாழவே பழகிக் கொண்டிருந்தனர். பல முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தவர்கள் உட்பட அனைவருக்கும் இதே நிலை..

எல்லார் மனதிலும் இனம் புரியாத கோபம். ஏன் எனக்கு? ஏன் அந்த இடத்தில்? இது ஒரு மிக தர்மசங்கடமான வலி, உபாதை.. மனிதனை விரைவில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும் என்பது நான் அனுபவித்து அறிந்த உண்மை.. இந்தனைக்கும் எனக்கு இருந்தது ஒன்றும் பொறுக்க முடியாத வலி ஒன்றும் இல்லை.

ஒரு நாள் இந்த வலியில் இருந்து விடுதலை பெற்ற இணைய நண்பர் ஒருவர் மூலம் Dr. Sarno அறிமுகம் ஆனார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவர். தன்னிடம் வரும் நோயாளிகள் அலோபதி மருதவத்தின் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் முற்றிலும் குணம் அடைபவர்கள் மிக சிலரே என்று உணர்ந்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு முக்கியமான விடை கண்டறிந்தவர். அதன் மூலம் அநேகரை குணப்படுத்தியும் வருகிறார்.

இவருடைய சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதற்கும் இடம் இல்லை. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் பற்றிய அவரின் புத்தகங்களை படித்தாலே குணம் அடைந்து விடுகின்றனர் பலர். இதில் அநேகர் படுத்த படுக்கையாக இருந்தவர்கள், ஒரே வாரத்தில் ஓடி விளையாடும் அளவிற்கு என்பது தான் ஆச்சர்யம்! இந்த சிகிச்சை முறைக்கு Mindbody Medicine என்று பெயர்.

எனக்கு நம்பிக்கை இல்லை. Amazon.com சென்று இவரின் நூல்களுக்கு வாசகர்கள் எழுதி இருக்கும் testimonials படித்து பார்த்தேன். நூற்றுகணக்கில்! அனைத்தும் இவரின் சிகிச்சையினால் முழு குணம் அடைந்தவர்கள்! ஒரு வேலை இவரின் ஆட்களே இப்படி எழுதி இருப்பார்களோ? ஏதோ மோசடி வேலையோ என்று எண்ணத் தோன்றியது.. ஒருவர் எழுதி இருந்தார், “இதில் யாருக்கும் ஒரு நம்பிக்கை இன்மை தோன்றுவது இயல்புதான். ஆனால் இப்படி யோசித்து பாருங்கள்.. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, $10 புத்தகம்.. படித்துதான் பாருங்களேன், இதில் நீங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லையே.. ” என்று.

வாங்கினேன், படித்தேன், குணம் பெற்றேன்! இரண்டே நாட்களில்! என்ன நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.. இந்த புத்தகத்தின் எளிமைப்படுத்தப்பட்ட சாராம்சம் இங்கே தருகிறேன்..
மனிதன் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது, அவனது மூளை அவனை திசை திரும்பப் செய்யும் சித்து வேலைதான் இந்த இனம் புரியாத வலி. மூளை இந்த நாடகத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறது? எலும்பு மூட்டுகளின் அருகில் இருக்கும் தசைகளுக்கு செல்லும் பிராணவாயு (oxygen) -வின் அளவைக் குறைப்பதன் மூலம்! இவ்வாறு குறைவதனால் அந்த தசைகள் வலுவிழந்து வலியைத் தோற்றுவிக்கின்றன. நான் உட்பட பலர் இது எலும்பில் உள்ள வலி என்று ஏமாந்து விடுகிறோம். பயந்தும் போகிறோம். ஆனால் இது சாதரணமாக தோன்றும் தசை பிடிப்பு.. டாக்டர்கள் பரிசோதிக்கும் போது எலும்போடு இந்த தசைகள் அழுத்தப்படும் போது, சிலருக்கு உயிரே போகும் வலி ஏற்படுகிறது.. டாக்டரும் இது எலும்பில் உள்ள குறைபாடு என்று அதற்கான அறுவை சிகிச்சை வரை போய்விடுவதால் தான் இந்த நிறை வேறாத பிரச்சனை.

சரி, இதற்க்கு என்ன தீர்வு! மிக சுலபம்… ‘knowledge therapy’ - புரிதல் வைத்தியம் என்று சொல்லலாமா? அதாவது, இந்த வலி நம் மன உளைச்சலளால் தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தாலே அது போய் விடுகிறது.. இது நான் அனுபவித்து அறிந்த உண்மை… இந்த புரிதல் இருந்தாலே மூளையின் இந்த சித்து வேலை எடுபடாது. இன்னும் ஒன்றை நாம் உணர வேண்டும்.. இந்த வலி தீர்வதற்கு, நம் மன உளைச்சல் தீர வேண்டும் என்பது இல்லை! காரணம் அதுவே என்று உணர்ந்தாலே போதும்!

இந்த வலி உடம்பின் எந்த பாகத்திலும் வரலாம்.. எனக்கு வந்தது ஆசன வாயில் அருகில். இப்பொழுது முற்றிலுமாக இல்லை! நான் இந்த வலி ஏற்பட்ட சமயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தது உண்மை. அதுவே எனக்கு ஏற்பட்ட வலிக்குக் காரணம் என்பதை என்னுடைய மனம் முதலில் நம்பவில்லை. ஆனால் Dr. Sarno -வின் நூல்களில் அவரிடம் குணமான பலரின் கதை என் அனுபவத்தை ஒட்டி இருந்தது என் மனதை மாற்றியது. இந்த சிகிச்சை முறையில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, புரிதல். இரண்டு, நம்பிக்கை. இந்த சிகிச்சை முறையின் மீதான நம்பிக்கை. இது மிகவும் அவசியம். இந்த நம்பிக்கை இல்லை என்றால் நம் மூளை நம்மை கவிழ்த்தி விடும். இந்த புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலனளிக்கவில்லை. வேடிக்கையான விந்தைதான். என் அனுபவம் என்னை நம்ப வைத்திருக்கிறது!

பல வருடங்களாக முதுகு வலியினால் படுத்த படுக்கையாக இருந்த பலர் ஒரே வாரத்தில் எழுந்து நடமாடிய அதிசயமும் உண்மை! இதில் சிலருக்கு x-ray களில் எதோ குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின்னரும் வலியில் அவதிப்பட்டவர்கள்!

நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. அந்த இணைய நண்பர் கூறியது போல, முதுகு வலி, மூட்டு வலி, இன்ன பிற இனம் புரியாத வலிகள் உள்ளவர்கள் இவரின் நூல்களை வாசித்து பார்க்கலாம்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? அவரின் நூல்கள் கூகிளில் தேடி, அமேசான் மூலமாகவோ அல்லது ebook வடிவத்திலோ படித்து பார்க்கலாம். இந்த கடிதத்தை உங்கள் வலைமனையில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒருவரேனும் தங்கள் வலியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றால் எனக்கு அதுவே மகிழ்ச்சி!

நவீன மருத்துவத்தின் எல்லைகளை எனக்கு உணர்த்திய அனுபவம் இது.. இன்னும் எழுத நினைக்கிறேன்.. உங்கள் கருத்தை அறிந்த பின்பு எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் ஒன்று உண்மை, நம் உடல் உபாதைகளுக்கான விடைகள் நமக்குள்ளும் நம் செயல்களுக்குள்ளும் இருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.. நீங்கள் கூறியது போல நம் மனத்தை ஆழ்ந்து கவனித்தாலே பல வியாதிகள் குணமடையும் போல!

நன்றி!
சதீஷ்

அன்புள்ள சதீஷ்,

நெருக்கடிகளில் மனம் என்ன செய்யும் என்பதைப்பற்றி நித்ய சைதன்ய யதியின் மாணவரும் ஆயுர்வேத மருத்துவருமான ஒருவர் ஒருமுறை குருகுலத்தில் உரையாற்றினார். பல உதாரனங்கள் அளித்தார். முதல் உதாரணம், நீர். தடைசெய்யப்படும் நீர் அந்த தடையை அழுத்தும். பக்கவாட்டில் இடம் தேடும். கிடைத்த சந்து வழியாக பாய்ந்தோடும். ஓர் உதாரணம் சொன்னார். வணிக நெருக்கடிகளில் சிக்கியவர்கள் பாலியல் மீறல்களை நோக்கிச் செல்கிரார்கள். அந்த திசைமாற்றம் அவர்கலை ஒருவகையில் காக்கிரது

ஒரு நெருக்கடியில் சிக்கியவர்கள் அதர்கினையான இன்னொரு நெருகக்டியை உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்டச்சிக்கல் ஒன்றில் மாட்டிய ஒருவர் சில குற்ரச்செயல்களில் ஈடுபட்டதை அவர் சொன்னார். இஅந்த பதற்றம் அந்தப்பதற்றத்தை சமன்செய்தது. இந்தப்பதற்றம் இவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகையால் முதல் பதற்றத்தைவிட வசதியானது என்று உணர்ந்தார். இதை அவர் வெப்பநோயுடன் ஒப்பிட்டார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி என ஒரு சொல்லாட்சி உன்டு

ஒரு இக்கட்டில் இருந்து தப்பிப்பதற்காக மனம் தன்னை பலவாக பிரித்துக்கொள்கிறது. தன்னைத்தானே திசை திருப்பிக் கொள்கிறது. பெரும்பாலான மனச்சோர்வுகள் ஆழமான குற்றவுணர்ச்சியில் இருந்து பிறப்பவை என்ற் சொன்னார். தன்னுடைய பாவ உனர்வு மனச்சோர்வாக மாறி அந்த மனிதரை வதைக்கிறது. மனச்சோர்வுக்கு அவர் பல காரணங்கள் சொல்வார், உண்மையான காரணத்தை வரது மனமே ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும்.

பெரும்பாலான தலைவலிகள் மனச்சோர்வின் விளைவுகளாக இருக்கும். மனம் எதையோ தன்னிடம் இருந்தே மறைக்க விரும்புகிறது என்று அதற்குப்பொருல். கணிசமான வயிறு உபாதைகள் -பசியின்மை அமிலத்தன்மை- மனம் சார்ந்தவையே. உடல்பயிற்சி இடமாற்றம் பயணம் போன்ரவை பல நோய்களை எலிதாகக் குணப்படுத்திவிடுவதைக் காணலாம்.

உங்கள் கடிதம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆனால் நிறைய சிந்திக்க வைத்தது

ஜெ

Stumble Upon Toolbar

Monday, June 1, 2009

ஜெயமோகன்: அஞ்சலி,கமலா சுரையா

//மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்//

இதை நான் சொன்னதற்கு திண்ணையில் பெரும் எதிர்ப்பு இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து எழுந்தது. இப்போது ஜெமோ அதை எழுதியுள்ளார். பார்க்கலாம்.

நேகு

-----------


http://jeyamohan.in/?p=2819

அஞ்சலி:கமலா சுரையா
June 1, 2009 – 1:32 pm

கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.





என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.

சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.

மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.

ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.

கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.

கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.

அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.

நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை ·போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை

********அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.********

கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல் கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.

Stumble Upon Toolbar

Friday, May 22, 2009

ரசித்த கவிதை: என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்

என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்

ஹெச்.ஜி.ரசூல்


என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.

அதிலிருந்து பாயும் குண்டுகள்

எதிரிகளை ஒவ்வொன்றாக

சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.

புத்தனை கொன்றுவிட்டு வந்த

சீடனொருவன் பிணமானான்.

காந்தியை படுகொலை செய்த

இந்தியன் ஒருவன் பிணமானான்

மாவோவை கொன்று புதைத்துவிட்டு

ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.

என் இருப்பிடத்திலிருந்து

முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்

பரவும் புகை மண்டலங்களில்

எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.

ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து

ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.

நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்

குண்டுகள் துளைத்திருக்கின்றன.

என் விரல்களின் வேகம் குறைய

என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.

தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து

என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்

அவளுக்கும் தெரியாது

அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.

குண்டுகள் தீர்ந்த பின்னரும்

என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.

Stumble Upon Toolbar

Wednesday, May 20, 2009

பிரபாகரனின் மறைவு...

"we silence our Guns" என்ற அறிக்கை வந்தபோதே பிரபாகரன் பிடிபட்டிருக்கக் கூடும் அல்லது சரணடைந்திருக்கக் கூடும். இராணுவம், அதிபரின் உத்தரவைக் கேட்டு அதன்பின் சரணடைந்த/பிடிபட்ட பிரபாகரனை கொன்றிருக்கக் கூடும்.

பிடிபட்டவரை/சரணடைந்தவரை உலகிற்கு காண்பித்து ட்ரையல் எல்லாம் இருந்தால், அது ஒரு பெரிய பப்ளிசிடி எக்ஸர்சைஸாக, எதிர்கால தமிழர்களையும் ஊக்குவிப்பதாக இருக்கக்கூடும் என்பதால் இப்படி செய்திருக்கலாம்.

கர்னல் ஹரிஹரன் (இவர் ஐபிகேஎஃபில் உளவுத்துறை தலைவராக இருந்தவராம்) டிவி பேட்டியில் சொல்லும்போது 'நான் அவரை புகழவில்லை, ஆனால் பிரபாகரன் ஒரு தனித்துவமான தலைவர், அவரைப் போன்றவர்கள் அடிக்கடி பிறப்பதில்லை, அவர் தனது குறிக்கோளில் காட்டிய தீவிரம் நாங்கள் எதிர்பாராதது' என்றார்.

நேதாஜியின் ஒரு ஸ்டேட்மண்ட் உண்டு, 'people need whip' என்ற அந்த
ஸ்டேட்மண்டை, நேதாஜியின் தீவிர ரசிகரான பிரபாகரன் பின்பற்றியதும்
இல்லாமல் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று தமிழ் ஈழத்திற்காக மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்தலாம், கிட்டும்வரை ஈழ மக்கள் மகிழ்சியாக இருக்கக்கூடாது என்று நினைத்து செயல்பட்டார். நேதாஜியுடன் ஒப்பிடுவது தவறு என்றாலும், இந்த நேதாஜியின் ஸ்டேட்மண்ட், அதை பிரபா எடுத்துச் செயல்பட்டதை யாரும் கவனிப்பதில்லை என்பதால் குறிப்பிடுகிறேன்.

நேற்று வரதராஜ பெருமாளும் டிவி பேட்டியில், பிரபாகரன் தப்பிக்காதது
ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். எப்படியோ, பிரபாகரன் இறந்துவிட்டது
சந்தேகமில்லாமல் உறுதியாகிவிட்டது. இறப்பு எப்படி நிகழ்ந்தது என்று
எதிர்காலத்தில் தெரியலாம்.

ஈழம் மூவ்மண்ட் அழிந்துவிட்டது, சந்தேகமில்லை. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா என்பது தெரியவில்லை. ராஜபக்சே ஒரு எண்டிடிவி பேட்டியில் தனது கான்ஸ்டிட்யூன்சியை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால், அந்த அளவுக்கெல்லாம் சாத்தியமில்லை என்ற ரீதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது.

இந்தியாவை பகைத்துக்கொள்ளும் எவருக்கும் இதுதான் முடிவு என்று
நினைக்கும்போது , உலகெங்கும் இருக்கும் தீவிரவாதிகளுக்கெதிரான போரை இது முனைந்து செயல்படுத்த முன்மாதிரியாக இருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்சியாக இருக்கிறது. ஆனால், எனது மனதின் ஒரு மூலையில் வருத்தம் இல்லாமல் இல்லை - ஹீரோவாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நபர், பின்னாளில் எதிரியாகப் போனாலும், பழைய பாசம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது போலும்.

எப்படியோ, ஈழத்தமிழர்கள் இனிமேலாவது நன்றாக இருந்தால் தேவலை. இலங்கை இனிமேலாவது தனது historical insecurities ஐ விட்டு வெளியே வந்து ராஜீவ் காந்தி பெருந்தன்மையுடன் சீக்கியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றியதுபோல - குறிப்பாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத்தமிழர்களின் தாயகத்தை ஏற்கவேண்டும் - அதை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரித்து, இலங்கையில் அவர்களுக்கு சம உரிமை தரவேண்டும். இதனால் இலங்கை குலைந்துவிடாது, பலமான - வளமான நாடாகவே திகழும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இந்தியாவின் பலகீனங்களாக கருதப்படுபவை தான் அதன் பலம். தமிழர்களை சேர்த்து அவர்களுக்கு உரிமை தந்து செயல்படுவதன் மூலமே இலங்கை அமைதியை நிலைநாட்டிட முடியும்.

~ நேசகுமார்.

இதை எழுதிய பின்பு, நண்பர் ஒருவர் அனுப்பிய இதுவும் வந்தது. இதுவும் உண்மைதான்.

http://news.rediff.com/column/2009/may/19/guest-blood-on-our-hands-but-this-too-shall-pass.htm

Blood on our hands, but this too shall pass

M K Bhadrakumar | May 19, 2009 | 17:10 IST

Liberation Tigers of Tamil Elam supremo Velupillai Prabhakaran's death circa May 19, 2009, in circumstances we would never quite get to know, concludes a morality play.
As the curtain comes down and we leave the theatre, the spectacle continues to haunt us. We feel a deep unease and can't quite figure out the reason. Something rankles somewhere. And then we realise we have blood on our hands.
Not only our hands, but our whole body and deeper down, our conscience -- what remains of it after the mundane battles of our day-to-day life � is also dripping with blood.
Prabhakaran's blood. No, it is not only Prabhakaran's, but also of 70,000 Sri Lankan Tamils who have perished in the unspeakable violence through the past quarter century.
All the pujas we may perform to our favourite Lord Ganesh each morning and evening religiously before we march ahead in our life from success to success cannot wash away the guilt we are bearing -- the curse of the 70,000 dead souls.
Our children and grandchildren will surely inherit the great curse. Oh, God, what a bitter legacy!
A long time ago, we created Prabhakaran. We picked him up as an urchin from nowhere. What we found charming about him was that he was so thoroughly apolitical -- almost innocent about politics. He was a simpleton in many ways, who had a passion for weapons and the military regimen. He suited our needs perfectly.
Which was� to humiliate the J R Jayewardene government in Sri Lanka and teach it a hard lesson about the dangers of being disrespectful to India's status as the pre-eminent power in the Indian Ocean. Jayewardene was too Western-oriented and behaved as if he never read about the Munroe Doctrine when he read history in Oxford. We didn't like at all his dalliance with the Israelis and the Americans in our very backyard.
So, we fostered Prabhakaran and built him up as a pinprick on Jayewardene's vanities -- as a Bhindranwale of the Deccan.
Then, as time passed, we decided that he had outlived his utility as we had come to develop an entirely different outlook towards the pro-Western orientation of the Colombo government by that time. Our egotistic leader in New Delhi who detested Jayewardene was no more in power and the new soft-spoken leader didn't share his predecessor's strong political antipathies.
So, we arm-twisted Prabhakaran to tone down and fall in line with our changed priorities. But we didn't realise that by then he had become a fully-grown adult.
He resisted our blackmail and pressure tactic. When we pressured him even more and tried to collar him, he struck back. He dispatched assassins to India and killed our beloved leader. And he became our eternal enemy.
Yet, we couldn't do anything to harm him. He had already become so strong -- an uncrowned king among his people. So we waited. We are a patient lot. Who can match us in infinite patience, given our 5000 years of history? Our cosmic religion gives us a unique wisdom to be patient and stoical and to bide our time.
And then, the opportune time came. We promptly moved in for the kill by aligning ourselves with Prabhakaran's enemies. We armed them and trained them in better skills to kill. We guided them with good intelligence. We plugged all escape routes for Prabhakaran. And then, we patiently waited as the noose tightened around Prabhakaran's neck.
Today he is no more. Believe it or not, we had no role in his death. How and when he died shall forever remain an enigma wrapped in a mystery. We will of course never divulge what we know.
All that matters is that the world woke up to the death only after the May 13 polling in the southern state of Tamil Nadu. Otherwise, the parliamentary election results may have gone haywire against us. Strange are the ways of the Indian democracy.�
We have had our revenge. Nothing else matters for the present.
What lies ahead? We will continue to make noises about a "political solution" to the Tamil problem that Prabhkaran championed through violent means.
Of course, let there be no doubt that we will periodically render humanitarian assistance to the hundreds of thousands of Tamil civilians who have been herded into camps and may languish there till the dust settles down. We will demonstrate that we are indeed capable of the milk of human kindness. After all, the Sri Lankan Tamils are part of our historical consciousness.
But we must also be realistic. We know in our heart of hearts that the scope for a political solution in the fashion in which our leaders seem to suggest publicly is virtually nil.
The Sinhalese will never allow the world to dictate to them a political solution. More so, they will promptly and conclusively rebuff any attempt by us to seek a role in what they will now onward insist as strictly their internal affair.
Always remember that Sri Lanka is the last bastion of Theravada Buddhism and preserving that legacy is the Sinhalese people's precious tryst with destiny. At least, that is how they feel. We have to accept the weight of their cultural nationalism.
They see Sri Lanka as the land of the Sinhalese. How would they allow us Indians who wiped out Buddhism with such ferocity from the subcontinent interfere with their keen sense of destiny as the custodians of that very same great religion? Never, never.
If we try to pressure the Sinhalese, they will approach the Chinese or the Pakistanis to balance our pressure. They are capable of doing that.
The Sinhalese are a gifted people. We all know few can never match their terrific skills in media management. They have always lived by their wits.
Equally, they are fantastic practitioners of diplomacy. We suspect that they may in fact have an edge over us on this front, for unlike us who are dissimulating from day to day as if we're a responsible regional power and dissipating our energies in pastimes such as hunting down Somalian pirates in distant seas, they are a highly focused lot.
They have the grit because they are fighting for the preservation of their country's future identity as a Buddhist nation.
Only last week, they showed their diplomatic skill by getting the Russians and the Chinese to stall a move in the United Nations Security Council to pressure them.
The Europeans fancy they can try the Sinhalese for war crimes. What naivety!
We asked the Sinhalese in private many a time how they proposed to navigate their way in the coming period. They wouldn't divulge.
But we know that it is not as if they have no solution of their own to the Tamil problem, either. We know they already have a blueprint.
See, they have already solved the Tamil problem in the eastern provinces of Trincomalee, Batticaloa and Ampara. The Tamils are no more the majority community in those provinces.
Similarly, from tomorrow, they will commence a concerted, steady colonisation programme of the northern provinces where Prabhakaran reigned supreme for two decades. They will ensure incrementally that the northern regions no more remain as Tamil provinces.
The Tamils will be made into a minority community in their own northern homelands. They will have to live among the newly created Sinhalese settlements in those regions to the north of Elephant Pass.
All this will indeed be within Sri Lanka's "federal structure". Sri Lanka will continue to adhere to parliamentary democracy.
Give them a decade at the most. The Tamil problem will become a relic of the bloody history of the Indian subcontinent.
The Sinhalese are good friends of India. Our elite and their elite speak the same idiom. We both speak good English, play golf and like chilled beer. We should, therefore, wish them well.
As for the blood on our hands, true, it is a�nuisance. But this is not the first time in our history that we're having blood on our hands.
Trust our words. No lasting harm will be done. Blood doesn't leave stains.
(The writer is a former Indian diplomat who served in Sri Lanka in the 1980s)

Stumble Upon Toolbar

Sunday, March 1, 2009

ரசித்த பதிவு: ஜெயமோகனின் ‘தனிக்குரல்’-II

Jeyamohan Bookஇந்நூலின் பகுதி-இரண்டு குறித்த ஒரு சுவாரசியமான தனி அனுபவம் எனக்கு உண்டு. கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இயற்றப்பட்டிருந்த காலகட்டம் அது. ஜெயமோகன் அதற்கு எதிரானவர் என்பது தெரிந்த போது அந்த ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ குறித்து அவரிடம் விவாதித்தேன். அவர் இறுதியாக தொலைபேசியை வைப்பதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகளை இப்போது நினைவு கூர்கிறேன்.

எனக்கு புள்ளியல் தரவுகளை வைத்துக் கொண்டு வாதாடுவதில் இஷ்டமில்லை. எனது உள்ளுணர்வு - ஒரு இலக்கியவாதி- என்கிற முறையில் இந்த சட்டத்தால் பயனில்லை என்றும் இதனால் பாரதத்துக்கு தீமைகளே அதிகம் என்றும் சொல்கிறது. இந்த தொகுப்பில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக ஜெயமோகன் பேசிய உரை பதிவாகியுள்ளது. இக்கட்டுரையில் எல்லா கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உணர்ச்சி வசப்படும் இந்துத்துவர்களுக்கு ஒரு நல்ல எதிர்மருந்தாக இக்கட்டுரையை நான் இன்றைக்கு கருதுகிறேன். இக்கட்டுரை எழுப்பும் வினாக்களுக்கு ஒவ்வொரு இந்துத்துவரும் பதில் அளிக்க முயலவேண்டும். என்னுடைய பதில்களை இங்கே முன்வைக்கிறேன்.

கிறிஸ்தவம் கருணையையும் இஸ்லாம் சமத்துவத்தையும் முன்வைப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். கருணையையும் சமத்துவத்தையும் தன் எந்த நிலைப்பாட்டுக்கும் ஒரு முன்நிலையாக வைத்து விவாதித்தே ஒரு சமுதாயம் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனால் மத-மேலாதிக்க நோக்கத்துடன் செயல்படும் இருமதங்கள் அவற்றின் பின்னணியில் செயல்படும் ஆக்கிரமிப்பு சக்திகள், அவற்றுடன் சாதியத்தை அரசியலாக்கி வைத்துள்ள நம் சுயநல அரசியல், நம்முடைய பெரும் சமுதாய தேக்கத்தினுள்ளிருந்து எழும் தடைகற்கள் இத்தனைக்கும் அப்பால் ஒரு சிறு விவேகமான ஆனால் எவ்வித அரசியல் மற்றும் பொருளாதார சக்தி அற்ற இந்து சமுதாயக் குழு - எப்படி இந்த உரையாடல் ஒரு சமத்தன்மை கொண்ட தளத்தில் நடக்க இயலும்? ஒரு எளிய வழியை ஜெயமோகன் சொல்கிறார்: கிறிஸ்தவத்தை விட கருணை வாய்ந்ததாக இஸ்லாத்தை விட சமத்துவம் உடையதாக இந்து சமுதாயம் மாறிவிட்டால் போதுமே! மிக மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இது அப்படி எளிமையான விஷயம் அல்ல. இன்று பிரச்சாரம் செய்யப்படும் இஸ்லாத்தின் சமத்துவம் இருபதாம் நூற்றாண்டு பிரச்சார உருவாக்கமே தவிர வரலாற்று யதார்த்தமல்ல. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தை தொடங்கிய சையது அகமது கானின் எழுத்துக்களில் அப்பட்டமான சமத்துவமின்மையை தரிசிக்க முடியும். குலக்குழுக்களின் மேலாதிக்கம் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை பெரும் சமூக பொருளாதார சுரண்டல் முறையாகவே அரேபியா முழுமைக்கும் இருந்தது. இன்றைக்கும் இஸ்லாமிய சமத்துவத்தை பெரும் பிரச்சாரம் செய்யும் வகாபியிசத்தின் பூலோக சுவன பூமியான சவூதி அரேபியாவில் குலக்குழு அடக்குமுறை படுமோசமான வன்முறையாக படர்ந்தொளிருகிறது. கிறிஸ்தவத்தின் கருணையும் காலனிய மேலாதிக்கம் இழைத்த மானுட அழிவுகளின் உபரியிலிருந்து பெறப்பட்ட சிறு துளியே. இன்று நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க சமுதாயங்களின் பிறப்படிப்படையிலான வேற்றுமைகள் அற்ற சமுதாயத்துக்கு உலகம் கொடுத்துள்ள அழிவு விலை கற்பனை செய்யப்படமுடியாத கொடூரம் கொண்டது. இந்த இரத்தத்தால் கெட்டியாக்கப்பட்ட அஸ்திவாரத்தின் வலிமையின் மீது ஏறி நின்று கருணையையும் சமத்துவத்தையும் பிரச்சார கவர்ச்சியாக பயன்படுத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்த தேசத்தை எதில் கொண்டுவிடும்? ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும், பிலிப்பைன்ஸும், லத்தீன் அமெரிக்க நாடுகளும், இந்தியாவின் வடகிழக்கும் சான்று பகர்கின்றன.

“மதமாற்றம் இந்தியப் பண்பாட்டை அழித்துவிடுமா?” எனும் கேள்விக்கு ஜெயமோகன் தயக்கமே இல்லாமல் ஆம் என்கிறார். அந்த அழிவினை அவர் ஒன்றும் ஒதுங்கியிருந்து காணவில்லை. அது தன்னுடைய அழிவும் கூட என்பதனையும் கூறுகிறார். இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு கருத்தியல் அளவில் நெருக்கமாக சென்ற ஒரு தருணமாக இக்கட்டுரையின் தொனி தென்படுகிறது.

தேங்கி நாறி சடங்குக்குட்டையாக இந்துமதம் இந்த தேசத்தில் இருப்பதைவிட அது அழிந்து கிறிஸ்தவ நாடாகவோ இஸ்லாமிய நாடாகவோ ஆவதே மேல்.

ஏனெனில் இந்த உரையில் அவர் கவனத்தில் வராதது அந்த வெற்றிடத்தில் இங்கே கொலுவேறப்போகும் சமயங்கள் சமத்துவத்தையும் கருணையையும் அடிப்படையாக கொண்டவையாக இருக்குமா? 90 விழுக்காடு கிறிஸ்தவமான மிசோக்களால் அடித்து விரட்டப்பட்டு இன்று அகதிகள் முகாம்களில் கடந்த பத்தாண்டுகளாக தம் சமூகக்குழுவின் அழிவை கண்கூடாக தரிசித்து வரும் சக்மா-ரியாங்க் வனவாசிகள் அதனை ஏற்பார்கள் என தோன்றவில்லை. இன்று இஸ்லாத்தின் முழு பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சமத்துவத்துக்கான வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவானவை. இது ஒரு பக்கம் மறுபக்கம் ஜெயமோகன் கூறுவது போல சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியுமா என்பதுதான். ஒரு மிகவும் நேர்மையான பதில் “இல்லை” என்பதுதான் என நான் உணர்கிறேன். ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதைப் போல மதமாற்றம் என்பது ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய பொருளாதார காரணங்களுக்காகவோ நடக்கும் போது அது குறித்த நியாயங்கள் ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. உதாரணமாக மதம் மாறினால் கல்லூரி பேராசிரியர் அல்லது பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவர்களை எனக்கு தெரியும். திருமணத்துக்காக மதம் மாறியவர்களை தெரியும். இவர்களில் எவரைக் கேட்டாலும் இவர்கள் தாங்கள் ஆசிரியர் வேலை கிடைப்பதன் நிர்ப்பந்தத்துக்காகவோ அல்லது கொழுத்த வரதட்சணைக்காகவோ மதம் மாறியதாக கூறப்போவதில்லை. அடுத்த இரண்டு தலைமுறைகளில் இவர்கள் மதமாற்றம் ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய நீதிக்காகவோ நடந்தததாக கற்பிதம் உருவாகிவிடும். இந்நிலையில் சட்டம் என்ன செய்ய முடியும்? உண்மையில் சட்டம்-அரசு நிர்வாகம் ஆகியவை சமுதாயத்தை ஆரோக்கியமானதாக மாற்றினால், வெறுப்பியல் பிரச்சாரங்களை தடுத்தால் அதுவே மதமாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சனையாகாமல் தடுத்துவிடும். உதாரணமாக நாகர்கோவிலின் பிரதான வீதி ஒன்றில் அனைவரும் காணும்படியாக “ஏசு மட்டுமே உயிருள்ள கடவுள்” என எழுதி போட்டிருக்கிறார்கள். அப்போது அல்லா? பன்மை சமுதாயத்தில் மதமாற்ற நோக்குடைய மதப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதற்கு சில குறைந்தபட்ச நாகரிக விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டாலே பல பிரச்சனைகள் குறைந்துவிடும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் ஒரு கண் துடைப்புதான். உருவாக்கியிருக்கலாம் என அஇஅதிமுக தலைமை எதிர்பார்த்த ஒரு இந்து ஓட்டுவங்கியை கவர செய்யப்பட்ட அரசியல் தந்திரம் மட்டுமே அது. “கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் ஒருவரையாவது கைது செய்திருக்கிறோமா?” என அன்றைய அஇஅதிமுக அமைச்சர் கிறிஸ்தவ மதப்பீடத்திடம் தேர்தலின் போது கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போது ஜெயமோகன் எழுதியதன் உண்மை எனக்கு உரைத்தது.

ஜெயமோகன் எனும் இலக்கியவாதியின் அகப்பரிணாம வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது. 2002 இல் பின் 2007 இல் நித்திய சைதன்ய யதியை குறித்த அவரது உரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இது 2002 இல்.

மாபெரும் இலக்கியங்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் வாழ்க்கையை தொகுத்து காட்டுதல்தான். … ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் சேர்ந்து மனிதனின் புற உலகை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறிவிடலாமா என்ன? அகமனதின் விரிவாக்கம், வெளிவிளக்கம்தானே புற உலகம்? அப்படிப்பார்த்தால் ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் இணைந்து மனிதனின் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நித்யாவின் புகழ்பெற்ற உவமையையே சொல்லவேண்டும்…நண்பர்களே தேன் தான் தேனீயை உருவாக்கியது என்று கூறினால் அது ஒரு உயர்ந்த விவேகமே ஆகும்.

இது 2007 இல்.

கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றோ தர்மம் என்றோ எண்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என வைத்துக்கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒருதுளி என அவர் உணரவில்லை. தன்னைச் சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரைக் கூன் விழ வைத்தது. கார்க்கியின் கடைசி நாட்கள். எத்தனை பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய நரகத்திலிருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும். …நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும் போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம்.

இந்த இரண்டு உரைகளும் உண்மையில் முரண்படவில்லை. வியக்கதகு விதத்தில் மாறுபட்ட கோணத்தில் ஒரே விஷயத்தை அவை கூறுகின்றன. ஒரு எழுத்தாளன் சிருஷ்டிக்கிறான். அவனே அதே நேரத்தில் சிருஷ்டியின் கருவியாகவும் இருக்கிறான். இந்த இருநிலைகளையும் இசைவித்து உணரும் கணமே பேரிலக்கியங்கள் பிறக்கும் தருணம். பிரபஞ்சமெங்கும் நிறைந்து பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் ஒரு மாபெரும் சத்தியத்தின் பலகணியாக தன்னை மாற்றுகிறான் இலக்கியம் படைப்பவன். இதற்காக தன்னகங்காரத்தை அவன் அழித்தாகவேண்டும். இதன் மூலம் பிறக்கும் இலக்கியமே ஒரு பெரும் சிருஷ்டியாகிறது. ஐந்து வருட இடைவெளிகளில் அதே இடத்தில் ஏற்படும் தொடர் உரையாடலை நாம் கேட்க முடிகிறது.ஜெயமோகனுக்கு நன்றி.

“வேதாந்த மரபும் இலக்கிய போக்குகளும்” எனும் கட்டுரை மிக முக்கியமானது. இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் வேதாந்தம் எத்தகைய இயங்கு சக்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதனை ஜெயமோகன் விவரிக்கிறார். அவரது முடிவு:

பாரதிக்குப் பிறகு தமிழில் பொதுவாக மாயாவாதம், பிரக்ஞை மையநோக்கு என்ற தளங்களில் மட்டுமே வேதாந்தம் வெளிப்பட்டுள்ளது. பாரதி வேதாந்தத்தை சமபாவனைக்கான ஒருமை தரிசனத்துக்கான தத்துவக் கருவியாக கையாண்டவர். அவ்வாறாக அதை ஒரு போராட்ட ஆயுதமாகவும் மெய்ஞானத்துக்கான வழிகாட்டியாகவும் உணர்ந்தவர். அந்நோக்கு பிற்பாடு தமிழில் இல்லை. பிற்பாடு அது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பார்வையாகவே நின்றுவிட்டது.

தனிக்குரல் - ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம் வெளியீடு
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600 018

Stumble Upon Toolbar