தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய பின்னூட்டம்:
புதிய பிளாக்கரில் எனது புதிய வலைப்பதிவிது.இதில் உருப்படியாய் எதுவும் எழுதும் உத்தேசமெல்லாம் இல்லை. இதை ஒரு நாட்குறிப்பு போன்று பயன்படுத்தலாம் என்றிருக்கின்றேன்.
தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய பின்னூட்டம்:
மனமெனும் நோய்..
ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்! என் பள்ளிக்காலங்களில் நான் தமிழில் சிறந்து விளங்கியிருந்தபோதும், பணத்தைத் தேடி அலைந்த இந்த இடைப்பட்டக் காலங்களில் தமிழில் எழுதுவது மிகவும் குறைந்து விட்டது. எனவே இந்த கடிதத்தில் இருக்கும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் கடந்த இரண்டு வருடங்களாகவே உங்கள் எழுத்துக்களை இந்த வலைமனை மூலம் வாசித்து வந்திருக்கிறேன். முதலில் சற்று சிரமமாக இருந்த போதும், தொடர்ந்து வாசித்ததில் உங்கள் எழுத்தின் பொருளும், நடையும் பிடித்து விட்டது.
நீங்கள் அவ்வபோது எழுதி வரும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் மிகவும் பயனளிப்பவையாக உள்ளன. இம்மாதிரியான மாற்று மருத்துவத்தில் எனக்குள்ள அனுபவத்தை சொல்கிறேன்.
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு உடல் சம்பந்தமான பிரச்சனை வர ஆரம்பித்தது. எனது முதுகுத்தண்டின் கீழ் முனையில், ஆசன வாயிலுக்கு அருகில் சிறு நெருடலை உணர ஆரம்பித்தேன். உட்காரும் போதும், தூக்கத்தில் புரண்டு படுக்கும் போதும் அந்த நெருடலை என்னால் உணர முடிந்தது. வலியில்லை. ஒரு சில வாரங்களுக்கு பின்னர் அந்த நெருடல் அதிகரித்த மாதிரியும் ஒரு சிறு வலி உணர்ந்த மாதிரியும் இருந்தது. ஒருவேளை நான் தொடர்ந்து அதை பற்றியே யோசித்து கொண்டிருப்பதால் தான் அவ்வாறு தோன்றுகிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.
ஆனால் சில நாட்களில் அந்த நெருடலுடன் கொஞ்சம் வலியும் சேர்ந்து கொண்டு என்னை பீதியடைய வைத்தன. வலி சிறிய அளவில் தான் இருந்த போதும், அது தோன்றும் இடம் மிக முக்கியமானது அல்லவா? இருக்கவே இருக்கிறது சர்வரோக நிவாரணி - இணையம்! கூகுளில் தேட ஆரம்பித்தேன்..
அவ்வாறு செய்ததற்கு என்னை நானே நொந்தும் கொண்டேன். அப்பப்பா எத்தனை விதமான வியாதிகள், பிரச்சனைகள்.. எல்லாமே எனக்கு இருக்கின்ற மாதிரி ஒரு கலக்கம். இந்த வலி பெரிதாக்கி என்னை செயலிழக்கச் செய்ய போகிறது என்று உறுதியாக நம்பினேன். மேலும் கலக்கம், குழப்பம். ஒரு வழியாக முடிவெடுத்து அலோபதி டாக்டரிடம் சென்றேன்..
அவர் என்னை பரிசோதித்தார், x-ray எடுத்துப் பார்த்தார். x-ray யில் எதுவும் வித்தியாசமாக இல்லை என்றும், நான் தொடர்ந்து உட்கார்ந்தே வேலை பார்க்கும் பணியில் இருப்பதால் வரும் பிரச்சனையை தான் என்றும் சொன்னார். மருந்து எழுதிக் குடுத்தார். ஒன்று வலியைக் குறைப்பதற்கு, மற்றொன்று எலும்பை உறுதியாக்குவதற்கு. சில நாட்களில் உறுத்தலும் வலியும் குறைந்தது. ஆனால் வலி மாத்திரையை நிறுத்தியவுடன் திரும்ப வந்தது. இது நிரந்தர தீர்வு அல்ல என்று உணர்ந்தேன். வேறு மருத்துவரிடம் சென்றேன். அவர் மிகப் பரிவுடன் விசாரித்தார். இதற்கு மருந்து அவசியம் இல்லை என்றும், ஆனால் 6 மாதங்களுக்கு நான் உறுதியான தரையில் உட்காரக் கூடாது என்றும், அலுவலகத்திலும், காரிலும் doughnut போன்ற நடுவில் ஓட்டை உள்ள தலையணை மீதே அமர வேண்டும் என்றும் கூறினார். எனக்கு சிறிது நம்பிக்கை வந்தது, இருந்தாலும் என் மனமென்னும் குரங்கு இதற்கு விரைவான தீர்வு இல்லையா என்று தேட ஆரம்பித்தது. அதுவும் இல்லாமல், அந்த doughnut மெத்தை பிறர் முன்னிலையில் உபயோகிக்கவும் கூச்சமாக இருந்தது. எனவே அதை வாங்கவே இல்லை. மீண்டும் கூகுளில் தேடல்…
இரண்டாவதாக நான் பார்த்த டாக்டர் எனக்கு வந்திருப்பது coccyxdinia என்ற உபாதையின் தொடக்கம் என்று சொல்லியிருந்தார். அதை பற்றி கூகுளில் தேடினேன்.. மீண்டும் பயமுறுத்தும் தகவல்கள். இந்த நோயை பற்றி மட்டுமே விவாதிக்கும் forums வாசிக்க ஆரம்பித்தேன். அலோபதி மருத்துவத்தில் யாருமே நிரந்தர தீர்வு அடைந்த மாதிரி தெரியவில்லை. இந்த வலியை சமாளித்து வாழவே பழகிக் கொண்டிருந்தனர். பல முறை அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தவர்கள் உட்பட அனைவருக்கும் இதே நிலை..
எல்லார் மனதிலும் இனம் புரியாத கோபம். ஏன் எனக்கு? ஏன் அந்த இடத்தில்? இது ஒரு மிக தர்மசங்கடமான வலி, உபாதை.. மனிதனை விரைவில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும் என்பது நான் அனுபவித்து அறிந்த உண்மை.. இந்தனைக்கும் எனக்கு இருந்தது ஒன்றும் பொறுக்க முடியாத வலி ஒன்றும் இல்லை.
ஒரு நாள் இந்த வலியில் இருந்து விடுதலை பெற்ற இணைய நண்பர் ஒருவர் மூலம் Dr. Sarno அறிமுகம் ஆனார். இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவர். தன்னிடம் வரும் நோயாளிகள் அலோபதி மருதவத்தின் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் முற்றிலும் குணம் அடைபவர்கள் மிக சிலரே என்று உணர்ந்து அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு முக்கியமான விடை கண்டறிந்தவர். அதன் மூலம் அநேகரை குணப்படுத்தியும் வருகிறார்.
இவருடைய சிகிச்சை முறையில் மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதற்கும் இடம் இல்லை. எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் பற்றிய அவரின் புத்தகங்களை படித்தாலே குணம் அடைந்து விடுகின்றனர் பலர். இதில் அநேகர் படுத்த படுக்கையாக இருந்தவர்கள், ஒரே வாரத்தில் ஓடி விளையாடும் அளவிற்கு என்பது தான் ஆச்சர்யம்! இந்த சிகிச்சை முறைக்கு Mindbody Medicine என்று பெயர்.
எனக்கு நம்பிக்கை இல்லை. Amazon.com சென்று இவரின் நூல்களுக்கு வாசகர்கள் எழுதி இருக்கும் testimonials படித்து பார்த்தேன். நூற்றுகணக்கில்! அனைத்தும் இவரின் சிகிச்சையினால் முழு குணம் அடைந்தவர்கள்! ஒரு வேலை இவரின் ஆட்களே இப்படி எழுதி இருப்பார்களோ? ஏதோ மோசடி வேலையோ என்று எண்ணத் தோன்றியது.. ஒருவர் எழுதி இருந்தார், “இதில் யாருக்கும் ஒரு நம்பிக்கை இன்மை தோன்றுவது இயல்புதான். ஆனால் இப்படி யோசித்து பாருங்கள்.. மருந்து இல்லை, மாத்திரை இல்லை, அறுவை சிகிச்சை இல்லை, $10 புத்தகம்.. படித்துதான் பாருங்களேன், இதில் நீங்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லையே.. ” என்று.
வாங்கினேன், படித்தேன், குணம் பெற்றேன்! இரண்டே நாட்களில்! என்ன நம்ப முடியவில்லையா? தொடர்ந்து படியுங்கள்.. இந்த புத்தகத்தின் எளிமைப்படுத்தப்பட்ட சாராம்சம் இங்கே தருகிறேன்..
மனிதன் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் பொழுது, அவனது மூளை அவனை திசை திரும்பப் செய்யும் சித்து வேலைதான் இந்த இனம் புரியாத வலி. மூளை இந்த நாடகத்தை எவ்வாறு நிறைவேற்றுகிறது? எலும்பு மூட்டுகளின் அருகில் இருக்கும் தசைகளுக்கு செல்லும் பிராணவாயு (oxygen) -வின் அளவைக் குறைப்பதன் மூலம்! இவ்வாறு குறைவதனால் அந்த தசைகள் வலுவிழந்து வலியைத் தோற்றுவிக்கின்றன. நான் உட்பட பலர் இது எலும்பில் உள்ள வலி என்று ஏமாந்து விடுகிறோம். பயந்தும் போகிறோம். ஆனால் இது சாதரணமாக தோன்றும் தசை பிடிப்பு.. டாக்டர்கள் பரிசோதிக்கும் போது எலும்போடு இந்த தசைகள் அழுத்தப்படும் போது, சிலருக்கு உயிரே போகும் வலி ஏற்படுகிறது.. டாக்டரும் இது எலும்பில் உள்ள குறைபாடு என்று அதற்கான அறுவை சிகிச்சை வரை போய்விடுவதால் தான் இந்த நிறை வேறாத பிரச்சனை.
சரி, இதற்க்கு என்ன தீர்வு! மிக சுலபம்… ‘knowledge therapy’ - புரிதல் வைத்தியம் என்று சொல்லலாமா? அதாவது, இந்த வலி நம் மன உளைச்சலளால் தான் ஏற்படுகிறது என்பதை உணர்ந்தாலே அது போய் விடுகிறது.. இது நான் அனுபவித்து அறிந்த உண்மை… இந்த புரிதல் இருந்தாலே மூளையின் இந்த சித்து வேலை எடுபடாது. இன்னும் ஒன்றை நாம் உணர வேண்டும்.. இந்த வலி தீர்வதற்கு, நம் மன உளைச்சல் தீர வேண்டும் என்பது இல்லை! காரணம் அதுவே என்று உணர்ந்தாலே போதும்!
இந்த வலி உடம்பின் எந்த பாகத்திலும் வரலாம்.. எனக்கு வந்தது ஆசன வாயில் அருகில். இப்பொழுது முற்றிலுமாக இல்லை! நான் இந்த வலி ஏற்பட்ட சமயத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தது உண்மை. அதுவே எனக்கு ஏற்பட்ட வலிக்குக் காரணம் என்பதை என்னுடைய மனம் முதலில் நம்பவில்லை. ஆனால் Dr. Sarno -வின் நூல்களில் அவரிடம் குணமான பலரின் கதை என் அனுபவத்தை ஒட்டி இருந்தது என் மனதை மாற்றியது. இந்த சிகிச்சை முறையில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று, புரிதல். இரண்டு, நம்பிக்கை. இந்த சிகிச்சை முறையின் மீதான நம்பிக்கை. இது மிகவும் அவசியம். இந்த நம்பிக்கை இல்லை என்றால் நம் மூளை நம்மை கவிழ்த்தி விடும். இந்த புரிதலும் நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு இந்த சிகிச்சை முறை பலனளிக்கவில்லை. வேடிக்கையான விந்தைதான். என் அனுபவம் என்னை நம்ப வைத்திருக்கிறது!
பல வருடங்களாக முதுகு வலியினால் படுத்த படுக்கையாக இருந்த பலர் ஒரே வாரத்தில் எழுந்து நடமாடிய அதிசயமும் உண்மை! இதில் சிலருக்கு x-ray களில் எதோ குறைபாடு கண்டுபிடிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதன் பின்னரும் வலியில் அவதிப்பட்டவர்கள்!
நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. அந்த இணைய நண்பர் கூறியது போல, முதுகு வலி, மூட்டு வலி, இன்ன பிற இனம் புரியாத வலிகள் உள்ளவர்கள் இவரின் நூல்களை வாசித்து பார்க்கலாம்.. இழப்பதற்கு என்ன இருக்கிறது? அவரின் நூல்கள் கூகிளில் தேடி, அமேசான் மூலமாகவோ அல்லது ebook வடிவத்திலோ படித்து பார்க்கலாம். இந்த கடிதத்தை உங்கள் வலைமனையில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஒருவரேனும் தங்கள் வலியில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்றால் எனக்கு அதுவே மகிழ்ச்சி!
நவீன மருத்துவத்தின் எல்லைகளை எனக்கு உணர்த்திய அனுபவம் இது.. இன்னும் எழுத நினைக்கிறேன்.. உங்கள் கருத்தை அறிந்த பின்பு எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால் ஒன்று உண்மை, நம் உடல் உபாதைகளுக்கான விடைகள் நமக்குள்ளும் நம் செயல்களுக்குள்ளும் இருக்கின்றன என எண்ணத் தோன்றுகிறது.. நீங்கள் கூறியது போல நம் மனத்தை ஆழ்ந்து கவனித்தாலே பல வியாதிகள் குணமடையும் போல!
நன்றி!
சதீஷ்
அன்புள்ள சதீஷ்,
நெருக்கடிகளில் மனம் என்ன செய்யும் என்பதைப்பற்றி நித்ய சைதன்ய யதியின் மாணவரும் ஆயுர்வேத மருத்துவருமான ஒருவர் ஒருமுறை குருகுலத்தில் உரையாற்றினார். பல உதாரனங்கள் அளித்தார். முதல் உதாரணம், நீர். தடைசெய்யப்படும் நீர் அந்த தடையை அழுத்தும். பக்கவாட்டில் இடம் தேடும். கிடைத்த சந்து வழியாக பாய்ந்தோடும். ஓர் உதாரணம் சொன்னார். வணிக நெருக்கடிகளில் சிக்கியவர்கள் பாலியல் மீறல்களை நோக்கிச் செல்கிரார்கள். அந்த திசைமாற்றம் அவர்கலை ஒருவகையில் காக்கிரது
ஒரு நெருக்கடியில் சிக்கியவர்கள் அதர்கினையான இன்னொரு நெருகக்டியை உருவாக்கிக் கொள்கிறார்கள். சட்டச்சிக்கல் ஒன்றில் மாட்டிய ஒருவர் சில குற்ரச்செயல்களில் ஈடுபட்டதை அவர் சொன்னார். இஅந்த பதற்றம் அந்தப்பதற்றத்தை சமன்செய்தது. இந்தப்பதற்றம் இவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகையால் முதல் பதற்றத்தைவிட வசதியானது என்று உணர்ந்தார். இதை அவர் வெப்பநோயுடன் ஒப்பிட்டார். உஷ்ணம் உஷ்ணேன சாந்தி என ஒரு சொல்லாட்சி உன்டு
ஒரு இக்கட்டில் இருந்து தப்பிப்பதற்காக மனம் தன்னை பலவாக பிரித்துக்கொள்கிறது. தன்னைத்தானே திசை திருப்பிக் கொள்கிறது. பெரும்பாலான மனச்சோர்வுகள் ஆழமான குற்றவுணர்ச்சியில் இருந்து பிறப்பவை என்ற் சொன்னார். தன்னுடைய பாவ உனர்வு மனச்சோர்வாக மாறி அந்த மனிதரை வதைக்கிறது. மனச்சோர்வுக்கு அவர் பல காரணங்கள் சொல்வார், உண்மையான காரணத்தை வரது மனமே ஆழத்தில் புதைத்து வைத்திருக்கும்.
பெரும்பாலான தலைவலிகள் மனச்சோர்வின் விளைவுகளாக இருக்கும். மனம் எதையோ தன்னிடம் இருந்தே மறைக்க விரும்புகிறது என்று அதற்குப்பொருல். கணிசமான வயிறு உபாதைகள் -பசியின்மை அமிலத்தன்மை- மனம் சார்ந்தவையே. உடல்பயிற்சி இடமாற்றம் பயணம் போன்ரவை பல நோய்களை எலிதாகக் குணப்படுத்திவிடுவதைக் காணலாம்.
உங்கள் கடிதம் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஆனால் நிறைய சிந்திக்க வைத்தது
ஜெ
//மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்//
இதை நான் சொன்னதற்கு திண்ணையில் பெரும் எதிர்ப்பு இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து எழுந்தது. இப்போது ஜெமோ அதை எழுதியுள்ளார். பார்க்கலாம்.
நேகு
-----------
http://jeyamohan.in/?p=2819
அஞ்சலி:கமலா சுரையா
June 1, 2009 – 1:32 pm
கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.
என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.
சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.
மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.
ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.
கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.
அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.
நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை ·போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை
********அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.********
கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல் கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.
என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.
அதிலிருந்து பாயும் குண்டுகள்
எதிரிகளை ஒவ்வொன்றாக
சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புத்தனை கொன்றுவிட்டு வந்த
சீடனொருவன் பிணமானான்.
காந்தியை படுகொலை செய்த
இந்தியன் ஒருவன் பிணமானான்
மாவோவை கொன்று புதைத்துவிட்டு
ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.
என் இருப்பிடத்திலிருந்து
முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்
பரவும் புகை மண்டலங்களில்
எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.
ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து
ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.
நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்
குண்டுகள் துளைத்திருக்கின்றன.
என் விரல்களின் வேகம் குறைய
என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.
தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து
என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கும் தெரியாது
அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.
குண்டுகள் தீர்ந்த பின்னரும்
என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.
"we silence our Guns" என்ற அறிக்கை வந்தபோதே பிரபாகரன் பிடிபட்டிருக்கக் கூடும் அல்லது சரணடைந்திருக்கக் கூடும். இராணுவம், அதிபரின் உத்தரவைக் கேட்டு அதன்பின் சரணடைந்த/பிடிபட்ட பிரபாகரனை கொன்றிருக்கக் கூடும்.
பிடிபட்டவரை/சரணடைந்தவரை உலகிற்கு காண்பித்து ட்ரையல் எல்லாம் இருந்தால், அது ஒரு பெரிய பப்ளிசிடி எக்ஸர்சைஸாக, எதிர்கால தமிழர்களையும் ஊக்குவிப்பதாக இருக்கக்கூடும் என்பதால் இப்படி செய்திருக்கலாம்.
கர்னல் ஹரிஹரன் (இவர் ஐபிகேஎஃபில் உளவுத்துறை தலைவராக இருந்தவராம்) டிவி பேட்டியில் சொல்லும்போது 'நான் அவரை புகழவில்லை, ஆனால் பிரபாகரன் ஒரு தனித்துவமான தலைவர், அவரைப் போன்றவர்கள் அடிக்கடி பிறப்பதில்லை, அவர் தனது குறிக்கோளில் காட்டிய தீவிரம் நாங்கள் எதிர்பாராதது' என்றார்.
நேதாஜியின் ஒரு ஸ்டேட்மண்ட் உண்டு, 'people need whip' என்ற அந்த
ஸ்டேட்மண்டை, நேதாஜியின் தீவிர ரசிகரான பிரபாகரன் பின்பற்றியதும்
இல்லாமல் அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்று தமிழ் ஈழத்திற்காக மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்தலாம், கிட்டும்வரை ஈழ மக்கள் மகிழ்சியாக இருக்கக்கூடாது என்று நினைத்து செயல்பட்டார். நேதாஜியுடன் ஒப்பிடுவது தவறு என்றாலும், இந்த நேதாஜியின் ஸ்டேட்மண்ட், அதை பிரபா எடுத்துச் செயல்பட்டதை யாரும் கவனிப்பதில்லை என்பதால் குறிப்பிடுகிறேன்.
நேற்று வரதராஜ பெருமாளும் டிவி பேட்டியில், பிரபாகரன் தப்பிக்காதது
ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். எப்படியோ, பிரபாகரன் இறந்துவிட்டது
சந்தேகமில்லாமல் உறுதியாகிவிட்டது. இறப்பு எப்படி நிகழ்ந்தது என்று
எதிர்காலத்தில் தெரியலாம்.
ஈழம் மூவ்மண்ட் அழிந்துவிட்டது, சந்தேகமில்லை. ஆனால், ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை கிட்டுமா என்பது தெரியவில்லை. ராஜபக்சே ஒரு எண்டிடிவி பேட்டியில் தனது கான்ஸ்டிட்யூன்சியை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதால், அந்த அளவுக்கெல்லாம் சாத்தியமில்லை என்ற ரீதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இந்தியாவை பகைத்துக்கொள்ளும் எவருக்கும் இதுதான் முடிவு என்று
நினைக்கும்போது , உலகெங்கும் இருக்கும் தீவிரவாதிகளுக்கெதிரான போரை இது முனைந்து செயல்படுத்த முன்மாதிரியாக இருக்கிறது என்று நினைக்கும்போது மகிழ்சியாக இருக்கிறது. ஆனால், எனது மனதின் ஒரு மூலையில் வருத்தம் இல்லாமல் இல்லை - ஹீரோவாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட நபர், பின்னாளில் எதிரியாகப் போனாலும், பழைய பாசம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது போலும்.
எப்படியோ, ஈழத்தமிழர்கள் இனிமேலாவது நன்றாக இருந்தால் தேவலை. இலங்கை இனிமேலாவது தனது historical insecurities ஐ விட்டு வெளியே வந்து ராஜீவ் காந்தி பெருந்தன்மையுடன் சீக்கியர்களின் பல கோரிக்கைகளை நிறைவேற்றியதுபோல - குறிப்பாக ஒருங்கிணைந்த இலங்கையில் ஈழத்தமிழர்களின் தாயகத்தை ஏற்கவேண்டும் - அதை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரித்து, இலங்கையில் அவர்களுக்கு சம உரிமை தரவேண்டும். இதனால் இலங்கை குலைந்துவிடாது, பலமான - வளமான நாடாகவே திகழும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இந்தியாவின் பலகீனங்களாக கருதப்படுபவை தான் அதன் பலம். தமிழர்களை சேர்த்து அவர்களுக்கு உரிமை தந்து செயல்படுவதன் மூலமே இலங்கை அமைதியை நிலைநாட்டிட முடியும்.
February 3, 2009 by aravindansneelakandan கிறிஸ்தவம் கருணையையும் இஸ்லாம் சமத்துவத்தையும் முன்வைப்பதாக ஜெயமோகன் கருதுகிறார். கருணையையும் சமத்துவத்தையும் தன் எந்த நிலைப்பாட்டுக்கும் ஒரு முன்நிலையாக வைத்து விவாதித்தே ஒரு சமுதாயம் பரிணமிக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் கிடையாது. ஆனால் மத-மேலாதிக்க நோக்கத்துடன் செயல்படும் இருமதங்கள் அவற்றின் பின்னணியில் செயல்படும் ஆக்கிரமிப்பு சக்திகள், அவற்றுடன் சாதியத்தை அரசியலாக்கி வைத்துள்ள நம் சுயநல அரசியல், நம்முடைய பெரும் சமுதாய தேக்கத்தினுள்ளிருந்து எழும் தடைகற்கள் இத்தனைக்கும் அப்பால் ஒரு சிறு விவேகமான ஆனால் எவ்வித அரசியல் மற்றும் பொருளாதார சக்தி அற்ற இந்து சமுதாயக் குழு - எப்படி இந்த உரையாடல் ஒரு சமத்தன்மை கொண்ட தளத்தில் நடக்க இயலும்? ஒரு எளிய வழியை ஜெயமோகன் சொல்கிறார்: கிறிஸ்தவத்தை விட கருணை வாய்ந்ததாக இஸ்லாத்தை விட சமத்துவம் உடையதாக இந்து சமுதாயம் மாறிவிட்டால் போதுமே! மிக மிக எளிமையாக இருக்கிறது. ஆனால் இது அப்படி எளிமையான விஷயம் அல்ல. இன்று பிரச்சாரம் செய்யப்படும் இஸ்லாத்தின் சமத்துவம் இருபதாம் நூற்றாண்டு பிரச்சார உருவாக்கமே தவிர வரலாற்று யதார்த்தமல்ல. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தை தொடங்கிய சையது அகமது கானின் எழுத்துக்களில் அப்பட்டமான சமத்துவமின்மையை தரிசிக்க முடியும். குலக்குழுக்களின் மேலாதிக்கம் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படும் வரை பெரும் சமூக பொருளாதார சுரண்டல் முறையாகவே அரேபியா முழுமைக்கும் இருந்தது. இன்றைக்கும் இஸ்லாமிய சமத்துவத்தை பெரும் பிரச்சாரம் செய்யும் வகாபியிசத்தின் பூலோக சுவன பூமியான சவூதி அரேபியாவில் குலக்குழு அடக்குமுறை படுமோசமான வன்முறையாக படர்ந்தொளிருகிறது. கிறிஸ்தவத்தின் கருணையும் காலனிய மேலாதிக்கம் இழைத்த மானுட அழிவுகளின் உபரியிலிருந்து பெறப்பட்ட சிறு துளியே. இன்று நாம் காணும் ஐரோப்பிய அமெரிக்க சமுதாயங்களின் பிறப்படிப்படையிலான வேற்றுமைகள் அற்ற சமுதாயத்துக்கு உலகம் கொடுத்துள்ள அழிவு விலை கற்பனை செய்யப்படமுடியாத கொடூரம் கொண்டது. இந்த இரத்தத்தால் கெட்டியாக்கப்பட்ட அஸ்திவாரத்தின் வலிமையின் மீது ஏறி நின்று கருணையையும் சமத்துவத்தையும் பிரச்சார கவர்ச்சியாக பயன்படுத்தும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதமாற்றங்கள் இந்த தேசத்தை எதில் கொண்டுவிடும்? ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும், பிலிப்பைன்ஸும், லத்தீன் அமெரிக்க நாடுகளும், இந்தியாவின் வடகிழக்கும் சான்று பகர்கின்றன. “மதமாற்றம் இந்தியப் பண்பாட்டை அழித்துவிடுமா?” எனும் கேள்விக்கு ஜெயமோகன் தயக்கமே இல்லாமல் ஆம் என்கிறார். அந்த அழிவினை அவர் ஒன்றும் ஒதுங்கியிருந்து காணவில்லை. அது தன்னுடைய அழிவும் கூட என்பதனையும் கூறுகிறார். இந்தியாவை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு கருத்தியல் அளவில் நெருக்கமாக சென்ற ஒரு தருணமாக இக்கட்டுரையின் தொனி தென்படுகிறது. ஏனெனில் இந்த உரையில் அவர் கவனத்தில் வராதது அந்த வெற்றிடத்தில் இங்கே கொலுவேறப்போகும் சமயங்கள் சமத்துவத்தையும் கருணையையும் அடிப்படையாக கொண்டவையாக இருக்குமா? 90 விழுக்காடு கிறிஸ்தவமான மிசோக்களால் அடித்து விரட்டப்பட்டு இன்று அகதிகள் முகாம்களில் கடந்த பத்தாண்டுகளாக தம் சமூகக்குழுவின் அழிவை கண்கூடாக தரிசித்து வரும் சக்மா-ரியாங்க் வனவாசிகள் அதனை ஏற்பார்கள் என தோன்றவில்லை. இன்று இஸ்லாத்தின் முழு பிடியில் இருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சமத்துவத்துக்கான வாய்ப்புகள் இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் மிகக் குறைவானவை. இது ஒரு பக்கம் மறுபக்கம் ஜெயமோகன் கூறுவது போல சட்டத்தால் மதமாற்றத்தை தடுக்க முடியுமா என்பதுதான். ஒரு மிகவும் நேர்மையான பதில் “இல்லை” என்பதுதான் என நான் உணர்கிறேன். ஜெயமோகன் சுட்டிக்காட்டுவதைப் போல மதமாற்றம் என்பது ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய பொருளாதார காரணங்களுக்காகவோ நடக்கும் போது அது குறித்த நியாயங்கள் ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் ஏற்பட்டுவிடுகின்றன. உதாரணமாக மதம் மாறினால் கல்லூரி பேராசிரியர் அல்லது பள்ளி ஆசிரியர் வேலை கிடைக்கும் என்பதற்காக மதம் மாறியவர்களை எனக்கு தெரியும். திருமணத்துக்காக மதம் மாறியவர்களை தெரியும். இவர்களில் எவரைக் கேட்டாலும் இவர்கள் தாங்கள் ஆசிரியர் வேலை கிடைப்பதன் நிர்ப்பந்தத்துக்காகவோ அல்லது கொழுத்த வரதட்சணைக்காகவோ மதம் மாறியதாக கூறப்போவதில்லை. அடுத்த இரண்டு தலைமுறைகளில் இவர்கள் மதமாற்றம் ஆன்மிக காரணங்களுக்காகவோ அல்லது சமுதாய நீதிக்காகவோ நடந்தததாக கற்பிதம் உருவாகிவிடும். இந்நிலையில் சட்டம் என்ன செய்ய முடியும்? உண்மையில் சட்டம்-அரசு நிர்வாகம் ஆகியவை சமுதாயத்தை ஆரோக்கியமானதாக மாற்றினால், வெறுப்பியல் பிரச்சாரங்களை தடுத்தால் அதுவே மதமாற்றத்தை ஒரு அரசியல் பிரச்சனையாகாமல் தடுத்துவிடும். உதாரணமாக நாகர்கோவிலின் பிரதான வீதி ஒன்றில் அனைவரும் காணும்படியாக “ஏசு மட்டுமே உயிருள்ள கடவுள்” என எழுதி போட்டிருக்கிறார்கள். அப்போது அல்லா? பன்மை சமுதாயத்தில் மதமாற்ற நோக்குடைய மதப்பிரச்சாரங்கள் செய்யப்படுவதற்கு சில குறைந்தபட்ச நாகரிக விதிமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்பட்டாலே பல பிரச்சனைகள் குறைந்துவிடும். கட்டாய மதமாற்ற தடை சட்டம் ஒரு கண் துடைப்புதான். உருவாக்கியிருக்கலாம் என அஇஅதிமுக தலைமை எதிர்பார்த்த ஒரு இந்து ஓட்டுவங்கியை கவர செய்யப்பட்ட அரசியல் தந்திரம் மட்டுமே அது. “கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் நாங்கள் ஒருவரையாவது கைது செய்திருக்கிறோமா?” என அன்றைய அஇஅதிமுக அமைச்சர் கிறிஸ்தவ மதப்பீடத்திடம் தேர்தலின் போது கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போது ஜெயமோகன் எழுதியதன் உண்மை எனக்கு உரைத்தது. ஜெயமோகன் எனும் இலக்கியவாதியின் அகப்பரிணாம வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் இந்நூல் நமக்கு காட்டுகிறது. 2002 இல் பின் 2007 இல் நித்திய சைதன்ய யதியை குறித்த அவரது உரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இது 2002 இல். மாபெரும் இலக்கியங்கள் நமக்கு அளிக்கும் சித்திரம் வாழ்க்கையை தொகுத்து காட்டுதல்தான். … ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் சேர்ந்து மனிதனின் புற உலகை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று கூறிவிடலாமா என்ன? அகமனதின் விரிவாக்கம், வெளிவிளக்கம்தானே புற உலகம்? அப்படிப்பார்த்தால் ஒட்டுமொத்த மானுட இலக்கியமும் இணைந்து மனிதனின் உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நித்யாவின் புகழ்பெற்ற உவமையையே சொல்லவேண்டும்…நண்பர்களே தேன் தான் தேனீயை உருவாக்கியது என்று கூறினால் அது ஒரு உயர்ந்த விவேகமே ஆகும். இது 2007 இல். கார்க்கியின் பிழை என்ன? ‘நான் ஆக்கினேன்., இது எனது ஆக்கம்’ என்றெல்லாம் அவர் எண்ணிக் கொண்டதே. அதுவே பெரும் பற்றாக மாறி அவரைக் கட்டிப்போட்டது. ஒரு பெரும் விளையாட்டில் வெறும் கருவி அவரென அவர் உணரவில்லை. சரி அவருக்கு கடவுள் என்றோ பிரம்மம் என்றோ தர்மம் என்றோ எண்ண முடியாவிட்டால் ‘சரித்திரம்’ என வைத்துக்கொண்டிருக்கலாம். சரித்திரத்தின் லீலையில் தானும் ஒருதுளி என அவர் உணரவில்லை. தன்னைச் சரித்திரத்தின் சிற்பி என்று எண்ணிக் கொண்டார். அந்த சுமையே அவரைக் கூன் விழ வைத்தது. கார்க்கியின் கடைசி நாட்கள். எத்தனை பெரிய நரகம் அது? அவரே உருவாக்கிக் கொண்ட சொந்த நரகம். அந்தப் பெரிய நரகத்திலிருந்து அவரை பகவத் கீதையின் நான்கு சுலோகங்கள் விடுவித்திருக்கும். …நித்யாவின் சொற்களை இத்தருணத்தில் நினைவு கூர்கிறேன். உண்மையே எழுத்தாளனின் தேடல் என்றார் நித்யா. படைக்கும் கணத்தில் தன்னகங்காரம் அழியும் போதே பெரும் படைப்பு உருவாகிறது. தன்னைவிட பெரிய விஷயங்களுக்கு படைப்பாளி தன்னை ஒப்புக்கொடுக்கிறான். ஒவ்வொரு கணத்திலும் தன்னில் இருந்து தானை விலக்கி உண்மையை தரிசிப்பதே அவன் தவம். இந்த இரண்டு உரைகளும் உண்மையில் முரண்படவில்லை. வியக்கதகு விதத்தில் மாறுபட்ட கோணத்தில் ஒரே விஷயத்தை அவை கூறுகின்றன. ஒரு எழுத்தாளன் சிருஷ்டிக்கிறான். அவனே அதே நேரத்தில் சிருஷ்டியின் கருவியாகவும் இருக்கிறான். இந்த இருநிலைகளையும் இசைவித்து உணரும் கணமே பேரிலக்கியங்கள் பிறக்கும் தருணம். பிரபஞ்சமெங்கும் நிறைந்து பிரபஞ்சத்தின் அனைத்துமாகி நிற்கும் ஒரு மாபெரும் சத்தியத்தின் பலகணியாக தன்னை மாற்றுகிறான் இலக்கியம் படைப்பவன். இதற்காக தன்னகங்காரத்தை அவன் அழித்தாகவேண்டும். இதன் மூலம் பிறக்கும் இலக்கியமே ஒரு பெரும் சிருஷ்டியாகிறது. ஐந்து வருட இடைவெளிகளில் அதே இடத்தில் ஏற்படும் தொடர் உரையாடலை நாம் கேட்க முடிகிறது.ஜெயமோகனுக்கு நன்றி. “வேதாந்த மரபும் இலக்கிய போக்குகளும்” எனும் கட்டுரை மிக முக்கியமானது. இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் வேதாந்தம் எத்தகைய இயங்கு சக்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதனை ஜெயமோகன் விவரிக்கிறார். அவரது முடிவு: தனிக்குரல் - ஜெயமோகன்ஜெயமோகனின் ‘தனிக்குரல்’-II
இந்நூலின் பகுதி-இரண்டு குறித்த ஒரு சுவாரசியமான தனி அனுபவம் எனக்கு உண்டு. கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் இயற்றப்பட்டிருந்த காலகட்டம் அது. ஜெயமோகன் அதற்கு எதிரானவர் என்பது தெரிந்த போது அந்த ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’ குறித்து அவரிடம் விவாதித்தேன். அவர் இறுதியாக தொலைபேசியை வைப்பதற்கு முன்னதாக கூறிய வார்த்தைகளை இப்போது நினைவு கூர்கிறேன்.எனக்கு புள்ளியல் தரவுகளை வைத்துக் கொண்டு வாதாடுவதில் இஷ்டமில்லை. எனது உள்ளுணர்வு - ஒரு இலக்கியவாதி- என்கிற முறையில் இந்த சட்டத்தால் பயனில்லை என்றும் இதனால் பாரதத்துக்கு தீமைகளே அதிகம் என்றும் சொல்கிறது. இந்த தொகுப்பில் கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்துக்கு எதிராக ஜெயமோகன் பேசிய உரை பதிவாகியுள்ளது. இக்கட்டுரையில் எல்லா கருத்துகளையும் நான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் உணர்ச்சி வசப்படும் இந்துத்துவர்களுக்கு ஒரு நல்ல எதிர்மருந்தாக இக்கட்டுரையை நான் இன்றைக்கு கருதுகிறேன். இக்கட்டுரை எழுப்பும் வினாக்களுக்கு ஒவ்வொரு இந்துத்துவரும் பதில் அளிக்க முயலவேண்டும். என்னுடைய பதில்களை இங்கே முன்வைக்கிறேன்.
தேங்கி நாறி சடங்குக்குட்டையாக இந்துமதம் இந்த தேசத்தில் இருப்பதைவிட அது அழிந்து கிறிஸ்தவ நாடாகவோ இஸ்லாமிய நாடாகவோ ஆவதே மேல்.
பாரதிக்குப் பிறகு தமிழில் பொதுவாக மாயாவாதம், பிரக்ஞை மையநோக்கு என்ற தளங்களில் மட்டுமே வேதாந்தம் வெளிப்பட்டுள்ளது. பாரதி வேதாந்தத்தை சமபாவனைக்கான ஒருமை தரிசனத்துக்கான தத்துவக் கருவியாக கையாண்டவர். அவ்வாறாக அதை ஒரு போராட்ட ஆயுதமாகவும் மெய்ஞானத்துக்கான வழிகாட்டியாகவும் உணர்ந்தவர். அந்நோக்கு பிற்பாடு தமிழில் இல்லை. பிற்பாடு அது வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பார்வையாகவே நின்றுவிட்டது.
உயிர்மை பதிப்பகம் வெளியீடு
11/29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை-600 018