தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய பின்னூட்டம்:
//கட்டுரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வார்த்தையில் ஈழ இந்துக்களை குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறது. நமது கண் முன்னால், நம் தலைமுறையில் இந்துக்கள் சந்தித்த பேரழிவு இன்று இலங்கையில்/ஈழத்தில் நிகழ்ந்திருப்பது.
புலிகளுக்கு நாம் யாரும் ஆதரவாளர் கிடையாது. ஆனால், அதை சாக்காக வைத்து இன்று இந்த அளவுக்கு ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்தி, குறைந்தது ஆயிரம்-ஆயிரத்தைந்நூறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலத்திலேயே அகதிகளாக்கி ஒரு பெரும் ஹிந்து ஹோலோகாஸ்டை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள-பவுத்த பேரினவாத அரசு. அந்த இந்துக்களின் அழிவை, தொடர்ந்து இந்துக்கள் அழிக்கப்பட்டு இன்று இலங்கையில் முஸ்லீம்களை விட சிறுபான்மையினமாக இந்த முப்பதாண்டுகளில் மாற்றப்பட்டுவிட்ட கோரத்தை - ஆப்ரிக்காவில் நிகழ்ந்தது, அன்று யூதர்களுக்கு ஐரோப்பாவில் நிகழ்ந்தது என்று படித்து மட்டுமே அறிந்திருந்த ஒரு பேரழிவை தமிழ் இந்துக்களின் மீது நிகழ்த்திவிட்டு அந்த குருதி காயும் முன், குழந்தைகள் - சிறுவர்கள் - வயோதிகர்கள் என தமிழ் மக்கள் இன்னமும் பிணைக்கைதிகளாக வெளிச்சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரச மரக்கிளையுடன் திருமதி ராஜபக்ஷே யாழ்ப்பாணம் செல்வதும், பிரபாகரனை வெற்றி கொண்ட ராஜபக்சேவை துத்தகாமனுவுடன் ஒப்பிடுவதும், யக்கர்கள் ஒழிந்தார்கள் என்று பெருமிதம் கொள்வதும், ஜஸ்டிஸ் அமைச்சகத்திற்கு ஆலோசகர்களாக தேரர்கள் நியமிக்கப்பட்டு பவுத்த ஷரியாவை கொண்டு வந்து கொஞ்ச நஞ்ச இந்துக்களையும் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த நிலத்தில் திம்மிக்களாக மாற்றும் இந்த கொடூரத்தையும், குரூரத்தையும் ஒரு வார்த்தையை மட்டும் குறிப்பிட்டு சொல்லியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மற்றபடி நல்ல கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி ஜடாயு.//
-------
ஸ்ரீகிருஷ்ணா,
தனி மனித முத்திரை குத்தல்களில் ஈடுபடாமல், பதில் சொல்ல முடியுமென்றால், கொஞ்சம் எனது இந்த பதில்களை படித்து, சிந்தித்துவிட்டு ஒரு நாள் இடைவெளி விட்டு பின்பு பதில் சொல்லுங்கள். தயவு செய்து *உங்களைப் போன்ற புலி ஆதரவாளர்கள்' போன்ற முத்திரை குத்தல்களை தவிர்க்கவும். நாம் சந்திப்பது இணையத்தில். அதில், நான் புலி ஆதரவாளன் இல்லை என்று சொல்லியே எனது கருத்தை எழுதியபின்பு இப்படி முத்திரை குத்திவிட்டால் பின்பு பேசுவதற்கு என்ன இருக்கிறது? யார் புலி ஆதரவாளர் என்பது நமது எழுத்துக்களை வைத்து மட்டுமே முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதில் நீங்கள் என் மீது இப்படியான அபாண்ட முத்திரையை குத்தினால், நான் கூட நீங்கள் தான் உண்மையான புலி ஆதரவாளர், வேண்டுமென்றே புலி எதிர்ப்பாளர் போன்று எழுதி ஆனால், புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அல்லது இது 'பொட்டு அம்மான்' என்று எதையாவது எவ்வித ஆதாரமுமில்லாமல் முத்திரை குத்தி நகர்ந்துவிட முடியும். எனவே, இப்படியான முத்திரை குத்தல்கள் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. சற்றே நிதானமாக எழுதுங்கள், பதில் சொல்லுங்கள்.
----
// நான் தெரியாமல் தான் கேட்கிறேன்… இலங்கையில் புலிகளுக்கு மாற்றாக ‘இந்து’ என்ற உணர்வுடன் செயல்பட முயற்சித்த ஈழ விடுதலை /ஈழ அரசியல் இயக்கம் ஏதாவது ஒன்றை சொல்லுங்களேன் பார்ப்போம்… நான் இது வரை கேள்விப்படவில்லை. இலங்கைத் தமிழர்களே புலிகள் ஒடுக்கப்பட்ட பின்னும், இந்துக்களாகிய நாங்கள் அவதிப படுகிறோம் என்று எங்கும் சொன்னதாக தெரியவில்லை. இதில் எங்கே இந்துத்துவம் வருகிறது என்று தெரியவில்லை.//
'இந்து' என்ற உணர்வுடன் இருந்தால் தான் அவர்கள் இந்துவா? அப்படியென்றால், உங்கள் (நமது) முன்னோர்கள் அப்படி இந்து என்று கருதி, இந்து உணர்வுடன் இருந்தார்களா? அப்படி இல்லாது போனவர்கள் எல்லாம் இந்துக்கள் அல்லவா? எனக்குத் தெரிந்து ஒரு தலைமுறை, இரு தலைமுறைக்கு முன்பாக இந்து என்ற உணர்வுடன் யாரும் இருந்ததில்லை. தங்களை பிள்ளைமார், பிராம்மணர், சைவர், வைணவர் என்று எதாவது ஒரு செக்டோரியன் அடையாளத்துடனேயே கண்டார்கள்.
ஈழத்தமிழர்கள் சரித்திரப் பிண்ணனியின் காரணமாகவும், சில திசை திருப்பல்கள் காரணமாகவும் இன்று தம்மை சைவர்களாக கருதுகிறார்கள். ஆறுமுக நாவலர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அவர் இந்து இல்லையா? அல்லது அப்படி தன்னை சொன்னால் தான் இந்து என்று கருதுவீர்களா? அப்படியென்றால், அதன் நீட்சியாக இராமனுஜரையும், கண்ணப்பரையும், இன்னும் எண்ணற்ற ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், உங்களது முன்னோர்களையும் இந்து இல்லை என்பீர்களா? மேலும்,அப்படி இந்து என்ற உணர்வுடன், இந்துத்துவ ஆதரவாளராக இருந்தால் தான் ஒருவர் இந்து என்று கருதுவது பேதமை மட்டுமல்ல, வக்கிர எண்ணம்.
//உங்களைப் போன்ற புலி அபிமானிகள், கிறிஸ்தவம் கைவிட்டபின் இந்துத்துவத்தால் ஏதும் பலிக்குமா என்று பார்க்கிறீர்களா?//
இந்த புலி அபிமானி முத்திரை குத்தலுக்கு நான் மேலே பதில் சொல்லிவிட்டேன். கிறித்துவம் கைவிட்டபின் என்று எதை சொல்கிறீர்கள்? பசியால் வாடுகிறான் ஒருவன், அவனுக்கு ஒருவர் சாப்பாடு போடுகிறார். அவர் என்ன சாதி, என்ன மதம் என்று பார்த்து சாப்பிடுவானா? அதே நிலையில் தான் ஈழத்தமிழர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.
// War is ugly. Civil War is no exception. கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலேயே மரணம். //
யார் கத்தியெடுத்தது? தொடர்ந்து இனக்கலவரங்கள், அரசாங்க ரீதியான பாரபட்சங்கள், வன்கொடுமைகள், வலுக்கட்டாய குடியேற்றங்கள் என்று தொடர்ந்து கத்தியெடுத்தது சிங்கள-பவுத்த பேரினவாத அரசுதான். ஒரு கட்டத்தில் அதற்கான எதிர்வினையாக குழுக்கள் கிளம்பின. அவற்றுள் ஒன்று மற்றதையெல்லாம் சாப்பிட்டு பெரிய தீவிரவாத குழுவாக உருப்பெற்றது. இந்த கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் தான் மரணம் என்ற லாஜிக்கை, நீங்கள் பின்னே சொல்லியிருக்கும் நாலு பிரதமர்கள் மரணம் என்ற விஷயத்துக்குக் கூட பயன்படுத்தலாம்தானே? சிங்களவர்கள் வினை விதைத்தார்கள், தீவிரவாதத்தை அறுவடை செய்தார்கள். இப்போது விதைத்திருப்பதற்கு எதிர்காலத்தில் அறுவடை செய்வார்கள் என்று கூட சொல்லலாம் தான். நாம் சுவற்றிற்கு எந்தப்புறம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது தர்க்கத்தை வளைத்துக்கொள்ளலாம்.
// புலிகள் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இந்த கொடூரத்திற்கு ஒரு தலைப் பட்சமாக இலங்கை அரசை மட்டும் குறை சொல்வது சரி அல்ல. இலங்கை அரசு, இத்தனை நாள் தாமதித்ததே பெரிது. இப்போது அவர்கள் “enough is enough” என்று இறங்கி விட்டார்கள். //
ஒரு அரசு, இப்படி நீங்கள் சொல்வது போல 'enough is enough' என்று இறங்கினால் என்ன ஆகும் என்று உங்களை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்து பாருங்கள். 9/11 நிகழ்ந்தபின்பு முஸ்லீம்கள் மட்டுமல்ல, பிரவுன் நிறத்தவர்கள் பலரும் சங்கடங்களை அமெரிக்காவில் சந்தித்தார்கள். உடனடியாக அமெரிக்க அரசு உங்கள் பகுதிகளின் குண்டு வீசி எல்லோரையும் சகட்டு மேனிக்கு கொன்றிருந்தால் அது 'enough is enough' என்பதன் வெளிப்பாடு என்று எடுத்துக்கொள்வீர்களா? அல்லது எல்லா பிரவுன் நிறத்தவரையும் விலங்குகளைப் போல திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து சோதனை செய்கிறோம் என்ற பெயரில் தினம் தினம் பிடித்துச் சென்று சித்தரவதை செய்து கொன்று போட்டால் - உங்களது மனைவி, மகன் அல்லது மகள் இப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தால், அதை இப்படித்தான் நியாயப்படுத்துவீர்களா? நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். நக்சலைட் பிரச்சினை இருக்கிறது. அரசு அதற்காக விமானத்திலிருந்து குண்டுவீசி தண்டகாரன்யக்காடுகளில் இருக்கும் குடிகளை ஆயிரக்கணக்கில் கொன்று போட்டால், அதை சரி என்பீர்களா அல்லது தெலுங்கானா முழுவதையும் திறந்தவெளிச்சிறைசாலையாக மாற்றினால் சரி என்பீர்களா?
// They have won. they are celebrating in their own way. இதே புலிகள் செயித்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புறநானூற்று வீரம் என்று குதித்திருக்க மாட்டார்களா… //
அப்படியென்றால் நீங்கள் புலிகளையும், ஒரு அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. இதில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. ஒசாமா பின் லாடனையும் அமெரிக்க அரசையும் அல்லது நக்சலைட்டுகளையும் இந்திய அரசையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரி என்று நம்புவீர்களேயானால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட பார்வை நல்லவேளை உலகில் எங்கும் இல்லை என்பதோடு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். முன்பு ஒரு முறை எனது பதிவில், குஜராத்தில் இஸ்லாமிய தாதா/தீவிரவாதி ஒருவனின் மனைவியை போலீசார் கற்பழித்து கொன்றதைப் பற்றி வருந்தி எழுதியிருந்தேன்.
இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கெதிராக தொடர்ந்து எழுதிவந்தும், இன்றும் என்னால் சாமான்ய முஸ்லீம் மக்களை துன்புறுத்துவதும், கொல்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. அப்படிச் செய்யவில்லை என் அரசு, என் சமூகம் என்பதில் எனக்கு பெருமிதம் இருக்கிறது. சீக்கிய இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை எனது அரசும், நீதி அமைப்பும் (நாள்பட்டாவது) தண்டிக்கிறது, சோபியானில் இரு காஷ்மீர முஸ்லீம் பெண்கள் கற்பழிக்கப்பட்டால் உரியவர்கள் தண்டிக்கப்படுவதற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது பொது சமூகம் அப்படியான நிர்ப்பந்தத்தை கொண்டுவருகிறது. இப்படிப்பட்ட ஒரு அரசையும், சமூகத்தையும் எனது சமூகம் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
// மெஜாரிட்டி மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கிறது. இலங்கை என்ன இந்தியாவா.. //
ஸ்ரீகிருஷ்ணா - இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என்பதின் விளைவை ஓரளவுக்கு தமிழ்நாட்டுப் பிராம்மணர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இப்போது இலங்கை அரசை நீங்கள் நியாயப்படுத்துவது போலவே, இதையும் யாராவது நியாயப்படுத்தலாம். அதை நீங்கள் ஏற்பீர்களா(தயவு செய்து இதற்காக நேர்மையான பதிலை சொல்லுங்கள் - ஏனெனில் தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் நிலைக்கும் இலங்கையில் தமிழர்களின் நிலைக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உண்டு). இலங்கையில், சிங்களவர்கள் அரசு ஒத்துழைப்புடன் எத்தனை கலவரங்களை புலிகளுக்கு முன்பாக தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறார்கள், எத்தனை பத்தாண்டுகள் அந்த சமூகம் அமைதியாக போராடியிருக்கிறது என்று பாருங்கள்.
1983 போன்ற ஒரு கலவரத்தை மைனாரிட்டியான பிராம்மணர்கள் மீது ஏனைய தமிழர்கள், அரசு உதவியுடன் சேர்ந்து நடத்தி, பின்பு அதை என்னைப் போன்ற அபிராம்மணர்கள் நியாயப்படுத்தினால் அப்போது அது எவ்வளவு அருவருப்பான ஒன்றாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் இப்போது அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றீர்கள். முத்திரை வேறு - ஆனால் விஷயம் அதே தான். முகவரி வேறு என்பதால் நமது நியாயத்தன்மை விடைபெற்றுக்கொள்வது துரதிர்ஷ்டமான விஷயம்.
பாகிஸ்தானில், பங்களாதேஷில் எல்லாம் இந்த மைனாரிட்டியை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நினைக்கிறார்கள். அதையெல்லாம் சரி என்கிறீர்களா? ஒரு நாட்டிற்கு இமிக்ரண்டாக போவதற்கும், தமது பூர்வீக நிலத்தில் காலனி கால சரித்திர தவறுகளால் மைனாரிட்டியாவதற்கும் வித்தியாசங்கள் நிறைய உண்டு. ஈழத்தமிழர்கள் தமது பூர்வீக நிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எப்படி மைனாரிட்டியாக ஆவார்கள்? பிரித்துக் கொடுக்கும்போது பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையை இந்தியாவோடு சேர்த்துக்கொடுத்திருந்தால் சிங்களவர்கள் மைனாரிட்டி ஆகியிருப்பார்கள். ஒருவேளை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா எல்லாம் செர்த்து கொடுத்திருந்தால் இந்துக்கள் கூட (அதாவது இந்து என்று நீங்கள் கொடுக்கும் டெஃபனிஷன் படியான இந்துக்கள்) மைனாரிட்டியாக போயிருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நிலையைக் கற்பனை செய்து பார்த்து பின்பு இதற்கான பதிலை கூறுங்கள்.
//இலங்கையில் மக்கள் முள்வேலிக்குள் அவதிப்படுகிறார்கள். சரி. இந்துக்கள் என்று உங்களுக்கு மட்டும்தான் தோன்றுகிறது. சொல்கிறீர்கள். அவர்களே கூட அப்படி நினைப்பதாக தெரியவில்லை. அப்படியே சொன்னாலும் இவ்வளவு நாள் வாய் மூடி இருந்து விட்டு இப்போது நான் இந்து என்று அலறுவது நம்பக் கூடியதாக இருக்காது. அதோடு ஏன் பிள்ளையே ஆனாலும் சுவைன் ப்ளூ வந்து விட்டால் ஓரமாக ஒதுக்கி கஞ்சிதான் சாப்பாடு கொடுக்க வேண்டி வரும். இங்கே இலங்கை தமிழர்களுக்குள் நான்கு பிரதம மந்திரிகளையே பலிவாங்கிய, தற்கொலை தீவிரவாத விஷ வைரஸ் கலந்து விட்டிருக்கிறது. அப்போது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? மேலும் அப்பாவிகள் சாகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். இலங்கை அரசு உறுதியுடன் செயல் படுவதை பாராட்ட வேண்டும். ஏற்கனவே அவர்கள் தவனை முறையில் அடைத்து வைத்துள்ள தமிழர்களை விடுதலை செய்து குடியேற்ற ஆரம்பித்து விட்டார்கள். பத்தாயிரம் பேர்களை விடுதலை செய்து விட்டதாக படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரையுமே குடிஎர்ருவார்கள் என்றே நம்புகிறேன்//
ஈழத்தமிழர்கள் இந்துக்களாக இல்லாமல், முழுக்க முழுக்க கிறித்துவர்களாகவோ அல்லது பவுத்தர்களாகவோ இருந்திருந்தால் கூட எனது எண்ணம், இந்த விஷயத்தில் இப்படித்தான் இருக்கும். இதைத் தவிர இந்த கருத்து பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களைப் போன்ற கருத்துடையவர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஈழத்தமிழர்கள் இப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதை நினைத்தும், மொழியால் - கலாசாரத்தால் - வரலாற்றால் - நிலத்தால் அண்மையராக இருக்கும் தங்களைப் போன்றவர்களின் ஈரமற்ற கருத்துக்களும், வக்கிர மனோபாவத்தையும் பார்த்தால் அதிர்ச்சியாகக் கூட இருக்கிறது. இந்த விவாதத்தில் நான் சொல்வதை சொல்லிவிட்டேன் - இன்னும் நிறைய எழுதத்தோன்றினாலும், சுருக்கமாக சொல்ல முயன்றுள்ளேன். உங்களைப் போன்றவர்களை மாற்ற முடியாது என்று தெரியும். மற்ற பொதுஜனங்களுக்காகவே இந்த பதிலை எழுதியிருக்கிறேன். எனவே நீங்கள் இதற்கு பதிலை எப்படி சொன்னாலும், அமைதியே காப்பேன். ஆனால் ஒன்று நீங்கள் எதை எழுதினாலும், பின்பு கொஞ்சம் உங்களை, உங்களது குடும்பத்தை அந்த நிலையில் வைத்து கற்பனை செய்துகொண்டு பின்பு எழுதுங்கள். அல்லது என்றாவது ஒரு நாள் இதை யோசித்துப் பாருங்கள், மனிதராவீர்கள்.